விடாமல் தொடரும் கனமழை காரணமாக.. நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு.. இன்றும் விடுமுறை!

Manjula Devi
Jul 22, 2024,11:07 AM IST

ஊட்டி:   தொடர் கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியாளர் பவ்யா உத்தரவிட்டுள்ளார்.


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை மிக கனமழை வரை வெளுத்து வாங்கி வருகிறது.நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  கனமழை எதிரொளியாக ஏரி குளங்கள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டன.குறிப்பாக நீலகிரியில் நேற்று நள்ளிரவு கனமழை கொட்டி தீர்த்தது.




இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியாளர் பவ்யா நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா குன்னூர், கோத்தகிரி ஆகிய நான்கு தாலுகாவுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளார்.


அதேபோல் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது கன்னியாகுமரி கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அலைகள் நீண்ட உயரத்திற்கு எழுகின்றன. இதன் காரணமாக கடலின் அருகே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.