22, 23ம் தேதிகளில்.. நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

Meenakshi
Jun 19, 2024,06:07 PM IST

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர் தமிழகத்தில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பொழிந்து மக்களை குளிர்வித்து வருகிறது. இந்த மழை பொழிவால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இந்நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூன் 20, 21 இல்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜூன் 22,23ல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஜூன் 23ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரியில் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தேனி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.


சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் விரி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


தமிழ்நாட்டில் தெற்கு கடலோரப் பகுதியில் இன்று முதல் 21ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் சூறைக்காற்று வீசும். நாளை, நாளை மறுநாள் கேரளம், கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.