சூப்பர்ல.. இலங்கைக்கு கப்பலில் போகலாம்.. நாகையிலிருந்து.. நாளை முதல்!

Su.tha Arivalagan
Oct 09, 2023,11:38 AM IST

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டின் நாகப்பட்டனம் துறைமுகத்திலிருந்து வடக்கு இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் வழிப் போக்குவரத்து நாளை முதல் தொடங்குகிறது.


தமிழ்நாட்டில் தரைவழி போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து மிகவும் சிறப்பானதாக உள்ளது. ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் போன்ற போக்குவரத்து சேவை மக்களுக்கு சிறப்பான சேவையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது நீர் வழிப் போக்குவரத்தும் இணையவுள்ளது.



நாகப்பட்டினம் முதல் இலங்கை வரை பயணிகள்  கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்குகிறது. வடக்கு இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு இந்த கப்பல் போக்குவரத்து நடைபெறும். இதற்கான  பயணக் கட்டணம் ஜிஎஸ்டி உட்பட 7670 ரூபாய்  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதற்கான சோதனை ஓட்டம் நேற்று  நடைபெற்றது. செரியாபாணி வகையிலான மினி சொகுசுக் கப்பலாகும் இது. இந்தக் கப்பல் கொச்சியில் வடிவமைக்கப்பட்டதாகும்.   நேற்று நடைபெற்ற சோதனை வெள்ளோட்டம் வெற்றிகரமாக இருந்தது. சோதனை ஓட்டம் என்பதால் கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் பயணிகள் இல்லாமல் கப்பலைச் சேர்ந்த 14 பணியாளர்கள் மட்டும் பயணித்தனர். 


நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இலங்கை துரைமுகத்திற்கு சென்றடைய மூன்று மணி நேரம் ஆனது. பயணிகள் கப்பல் போக்குவரத்து சோதனை முயற்சி வெற்றி பெற்றதை, தொடர்ந்து இன்றும் வெள்ளோட்டம் நடைபெறும். அதன் பின்னர் நாளை முதல் இந்த கப்பல் போக்குவரத்து முறைப்படி தொடங்கும்


இந்த கப்பலில் பயணிக்க பாஸ்போர்ட அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.