கல்யாணம் முடித்த கையோடு.. உண்ணாவிரதத்திற்கு வந்த பொண்ணும், மாப்பிள்ளையும்!

Su.tha Arivalagan
Aug 20, 2023,01:59 PM IST
சென்னை: திருமணம் முடித்த கையோடு நீட் தேர்வு எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் புது மண ஜோடி கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வை எதிர்த்தும், இதுதொடர்பான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்த ஆளுநரைக் கண்டித்தும், நீட் தேர்வை ஒழிக்காமல் இருக்கும் மத்தியஅரசைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து  கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருகை தந்த ஒரு ஜோடியால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது. அவர்கள்தாான் அன்பானந்தம் - சொர்ணப்பிரியா தம்பதி.



இந்த இருவருக்கும் காலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திமுக விவசாய அணி மாநிலதுணைச் செயலாளர் அரியப்பன் என்பவரின் மகன்தான் அன்பானந்தம். முதல்வர் தலைமையில் திருமணம் முடிந்ததும், அவர்களிடம் ஆசி பெற்று விட்டு நேராக வள்ளுவர் கோட்டம் வந்து விட்டது அன்பானந்தம் - சொர்ணப்பிரியா ஜோடி.

உண்ணாவிரத அறப்போராட்டத்தில் இணையர் இருவரும் மணக்கோலத்திலேயே பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் போட்டுள்ள டிவீட்டில், நம் மாணவர்களின் கல்வி உரிமை காக்க, நீட் எதிர்ப்பு உண்ணாவிரத அறப்போரில் இணைந்த அன்பானந்தம் - சொர்ணப்பிரியா இணையரின் சமூக அக்கறை போற்றுதலுக்குரியது. இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அவர்களை வாழ்த்தினோம் என்றார் அவர்.