அடிக்கடி வந்த போன்.. "அதுவா இருக்குமோ".. குழப்பமான ரேஷ்மா.. அடுத்து நடந்த விபரீதம்!

Su.tha Arivalagan
Aug 28, 2023,11:06 AM IST
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அருவிக்கரை பகுதியில் புதிதாக திருமணமான பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் மீது ஏற்பட்ட சந்தேகமே இந்த தற்கொலைக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் ஆட்டிங்கல் என்ற ஊரைச் சேர்ந்தவர் ரேஷா. 23 வயதேயான இவருக்கும் அருவிக்கரையைச் சேர்ந்த அக்ஷ்ய் ராஜ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார் ரேஷ்மா.

புதுமணத் தம்பதிகள் என்பதால் உற்சாகத்திற்கும், சந்தோஷத்திற்கும் எந்தக் குறையும் இல்லை. எல்லாமே நல்லா போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் சமீப நாட்களாக ஒரு குழப்பம் ரேஷ்மாவை வாட்டி வதைக்க ஆரம்பித்தது.



அடிக்கடி கணவருக்கு போன் வருவதும்,  போன் வரும்போது அவர் பேசும் விதம், சிரிக்கும் விதம் எல்லாமே அவருக்குள் அவர் மீது ஒரு சந்தேக உணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தது. கணவருக்கு யாருடனோ தொடர்பு உள்ளதாக சந்தேகப்பட ஆரம்பித்தார். இந்த சந்தேகம் அவருக்கு பெரும் மனக் குழப்பத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. 

கணவர், யாரோ ஒரு பெண்ணுடன்தான் பேசுகிறார். அது அவரது கள்ளக்காதலியாக இருக்கும் என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் திடீரென ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது வீட்டின் பாத்ரூமில் அவர் தூக்குப் போட்டுள்ளார்.

சம்பவம் நடந்தபோது அவரது கணவர் வீட்டில் இல்லை. அவரது குடும்பத்தினர்தான் ரேஷ்மா உடலைப் பார்த்து விட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்தத் தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தற்கொலை தொடர்பாக ரேஷ்மாவின் குடும்பத்தினர் இதுவரை புகார் கொடுக்கவில்லை. இதனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. சந்தேக மரணமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்கொலை தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வே அல்ல என்பதை அனைவருமே புரிந்து கொள்ள வேண்டும். படித்தவர்களாக இருந்தாலும் சரி, படிக்காதவர்களாக இருந்தாலும் சரி மனக்குழப்பம் எல்லோருக்குமே ஏற்படக் கூடியதுதான். ஒரு விஷயத்தைப் பற்றி நாமே ஒரு முடிவுக்கு வந்து அதை வைத்து அதைப் போட்டு மனதை வருத்திக் கொண்டு இதுபோன்ற விபரீதமான முடிவை எடுப்பது நிச்சயம் தவறானது.. இது பிரச்சினைக்குத் தீர்வல்ல.. உட்கார்ந்து பேச வேண்டும். நிதானமாக பேச வேண்டும். நிதானமான மன நிலையில் பேசும்போது நிச்சயம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். 

தற்கொலை உணர்வு வந்தால் உடனே அந்த எண்ணத்தை விட்டு வேறு பக்கம் கவனத்தைத் திருப்பி விடுங்கள். யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள். தேவைப்பட்டால் உரிய மன நல ஆலோசனையைப் பெறுங்கள்.. தயவு செய்து உயிரை விடும் எண்ணத்தை அறவே கைவிடுங்கள்.