அடிச்சு வெளுத்த மழை.. மொத்த நியூயார்க்கும் மிதக்குது!

Su.tha Arivalagan
Sep 30, 2023,03:06 PM IST
நியூயார்க்: நியூயார்க் நகரில் பெய்த எதிர்பாராத கன மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படடுள்ளது.

இப்படி ஒரு மழையை நியூயார்க்கில் இதுவரை பார்த்ததே இல்லை என்று மக்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர்.  நியூயார்க் முழுவதும் சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளன. சுரங்கப் பாதைகளில் நீர் நிறைந்து காணப்படுகிறது.  புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த பேய் மழை ஆகியவையே இந்த வெள்ளக்காட்டுக்குக் காரணம்.



பல சாலைகளில் 3 முதல் 4 அடி வரை தண்ணீர் வெள்ளம் போல தேங்கிக் கிடக்கிறது. பல இடங்களில் கார்கள், வாகனங்கள் நீரில் மிதக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.  பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் கூட தண்ணீர் புகுந்து விட்டது. பல பகுதிகளில் மக்களால் வெளியே வர முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக காணப்பட்டது.

சென்டிரல் பார்க் விலங்கியல் பூங்காவுக்குள்ளும் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பூங்கா முழுவதும் வெள்ள நீர் புகுந்ததால் அங்குள்ள கடல் சிங்கம் ஒன்று பூங்காவை விட்டு வெளியேறி விட்டது.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த கடல் சிங்கத்தை மீட்டு பூங்காவுக்குள் மீண்டும் கொண்டு வந்து விட்டனர். தற்போது அந்த பூங்கா பூட்டப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் நியூயார்க் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நியூயார்க் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நியூயார்க் லா கார்டியா விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அதை வெளியேற்றும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒரு டெர்மினலை மூடி விட்டனர்.  பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் தாமதமாக செல்கின்றன. இதனால் நியூயார்க் வர வேண்டியவர்களும், நியூயார்க்கிலிருந்து செல்ல வேண்டியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.