புத்தாண்டு ராசி பலன்கள் 2024 : மேஷ ராசிக்கு என்னெல்லாம் காத்திருக்கு.. நினைத்தது  நடக்குமா?

Aadmika
Dec 26, 2023,06:30 PM IST
இளகிய மனமும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களிடம் இயல்பாகவே நிர்வாக திறன் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சரியாக புரிந்து கொள்ளக் கூடிய மனப்பக்குவமும், குடும்பத்திற்கு ஏற்றதை செய்யக் கூடிய பக்குவமும் இருக்கும். 2024 ம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு யோக பலன்களை தரக் கூடிய ஆண்டாக இருக்க போகிறது. முன் பாதியை விட பின் பாதி அதிக யோகங்களை தரக் கூடியதாக இருக்கும். ஜென்மத்தில் குரு இருந்தாலும் அதன் பயப்பட தேவையில்லை. அவருடைய பார்வை 9,7 மற்றும் 5 ஆகிய இடங்களில் பதிகிறது. இதனால் பல நல்ல பலன்களை குரு பகவான் வழங்க உள்ளார்.



பூர்வீக சொத்துக்கள்  வந்து சேரும்

மே மாதம் 1 ம் தேதிக்கு பிறகு குரு பகவான் 2ம் பாவத்திற்கு சென்று விடுகிறார். 12, 9 க்கு உடையவனான குரு பகவான் 2ம் பாவத்திற்கு செல்வதால் பூர்வீக சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் அமையும். மிக முக்கியமாக சுக்கிர பகவான் சஞ்சாரம் இந்த ஆண்டில் அதிவேகமான நேர்கோட்டில் நடக்க உள்ளது. மேஷ ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதி சுக்கிர பகவான்.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்

இதனால் பண வரவாக இருந்தாலும் சரி, உங்கள் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை கிடைப்பதாக இருந்தாலும் சரி, சமூகத்தில் உயந்த பதவி கிடைப்பதாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி இந்த ஆண்டில் சிறப்பானதாக இருக்கும். 

சுக்கிரனின் இந்த நேர்கோட்டு பயணத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை தர போகிறார். திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு திருமணம் நடைபெறும். கூட்டுத் தொழிலில் பலனை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல பலவை வழங்க உள்ளார். 

வீடு வாங்கும் யோகம் கூடி வருகிறது

புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தி தர போகிறார். சுக்கிர பகவான், மகாலட்சுமிக்கு உரிய கிரகம். அதனால் மகாலட்சுமியின் முழு அனுகிரகத்தை தர போகிறார். மன மகிழ்ச்சியை தர போகிறார். வீடு வாங்க முடியவில்லையே என ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு வீடு வாங்கும் யோகத்தை தரப் போகிறார். 

ராகு பகவானும் 12ம் பாவத்தில் இருந்து அருள் புரிவதால் பழைய வரா கடன்கள் இருந்தால் அது வசூலாகும். சனி பகவான் 11ம் பாவத்தில் திடமாக இருப்பதால் சுபிட்சங்கள் ஏற்படுவதற்கு, கடல் கடந்து வெளிநாடு செல்வதற்கும் யோக பலன்களும் ஏற்படும். 6ம் பாவத்தில் இருக்கக் கூடிய கேது பகவான் சில உடல் நல குறைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆண்டில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். 

உடல் உபாதைகளுக்கு வாய்ப்புண்டு

சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது சிறப்பானது. ஜென்மத்தில் இருக்கும் குரு பகவான் சில நன்மைகளை செய்தாலும், சில உடல் உபாதைகளை தருவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் நன்மைகள் நடக்கும். 

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுவதால் உங்களின் காரியங்களில் ஏற்படக் கூடிய தடைகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 5 இடத்திற்குரிய அதிபதியான சூரிய பகவான் 9 ம் இடத்தில் இருக்கும் போது இந்த ஆண்டு பிறக்கிறது. இதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. 

பண வரவு உண்டு.. கடன்கள் அடைபடும்

நவம்பர் மாதம் 03ம் தேதி செவ்வாய் பகவான் வக்கிரம் அடைகிறார். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடகத்திலே வக்கிரம் அடைவதால் வீடு கட்ட வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு அமையும். வீடு வாங்குவதற்கும் கேட்ட இடத்திலே பணம் சுமூகமாக கிடைத்து, அந்த கடனையும் நீங்கள் விரைவிலேயே அடைக்கும் அமைப்பும் ஏற்படும். 

நவம்பர் மாதம் புதன் பகவானும் வக்கிரம் அடைந்து, நிவர்த்தி அடைகிறார். 6 ம் அதிபதி 8 ல் வக்கிரம் ஆகிறார். இதை விபரீத ராஜயோகம் என்பார்கள். அதனால் கடன் பட்டு வீடு வாங்குவது போன்ற அமைப்புகள் ஏற்படும். இந்த தோஷ நிவர்த்திக்காக விநாயகப் பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இந்த சமயத்தில் நிறைய நிலங்கள் வாங்குவதற்கான வாய்ப்பும் ஏற்படும்.