அடேங்கப்பா...அல்ட்ரா மாடனாகும் கிளாம்பாக்கம்: ரூ. 20 கோடியில் புதிய ரயில் நிலையம் வருது

Meenakshi
Oct 07, 2023,12:43 PM IST

சென்னை : சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் அமைக்க டெண்டர் கோரியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  பஸ் ஸ்டாண்டை தொடர்ந்து ரயில் நிலையமும் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட உள்ளதால் சென்னை மக்கள் குஷியாகி உள்ளனர்.


சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று அனைத்து வசதிகளுடன்  இங்கேயும் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் சென்னை தென்பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ளது. இப்பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக நிலையில் உள்ளது. இருப்பினும், அங்கு தேங்கும் மழை நீர் வடிவதற்கு வசதி இல்லாமல் இருப்பதால் அதற்கான பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் இப்பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது.




கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னை தேசியநெடுஞ்சாலையை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரயில் நிலையங்கள் தற்பொழுது எதுவும் இல்லை. இப்பகுதி மக்கள் ரயில் நிலையம் செல்ல வேண்டும் என்றால், வண்டலூர் தான் போக வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர்  இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே தற்பொழுது தான் ஏற்று, டெண்டர் கோரியுள்ளது. ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க தெற்கு ரயில்வே திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த ரயில் நிலையம் 3 நடைமேடை கொண்ட ரயில் நிலையமாக  அமைய உள்ளது. புற நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை போன்று இங்கும் அனைத்து வசதிகளும் இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இப்புதிய ரயில் நிலையம் இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதை போன்று, கிளாம்பாக்கத்தில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. தற்பொழுது சென்னை விமான நிலையம் வரை மட்டுமே மெட்ரோ ரயில்  சேவை உள்ளது. அங்கிருந்து கிளாம்பாக்கம் வரை திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.