ஆர்ப்பரிக்கும் கனமழை.. 17ஆம் தேதிக்கு பின் வருது புது காற்றழுத்தம்.. எப்படி மழை இருக்கும்!

Su.tha Arivalagan
Nov 10, 2023,04:57 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நவம்பர் 17ஆம் தேதிக்கு பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


ஏற்கனவே அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வருகிறது. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


இந்நிலையில் நவம்பர் 17ஆம் தேதிக்குப் பிறகு தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெறும்.


இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தீபாவளிக்கு பின் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைவதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.