வங்கக் கடலில் காற்றழுத்தம்.. தமிழகத்தில் செப் 18 வரை.. சில இடங்களில்.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

Manjula Devi
Sep 13, 2024,08:30 PM IST

சென்னை:   தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மீண்டும் உருகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடந்த வாரம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். அதேபோல் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்தது.




இந்த நிலையில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,  தென் கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது.இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேற்கு வங்க கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. 


இதன் காரணமாக ஒடிசாவில் இன்று முதல் செப்டம்பர் 15 வரை, கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். இதனால் மீனவர்கள் வடக்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இது தவிர  மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


குறிப்பாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் அசௌரிகம் ஏற்படலாம். சென்னையில் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்