வங்கக்கடலில்.. வரும் 5ஆம் தேதி வாக்கில்.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

Manjula Devi
Sep 03, 2024,04:32 PM IST

சென்னை: வங்கக்கடலில் வரும் ஐந்தாம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் ஒன்பதாம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக  தமிழகத்தில்  ஏற்கனவே பரவலாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அரபிக் கடலில் அஸ்னா புயலாக மாறி ஆந்திரா, தெலுங்கானா, குஜராத்,  உள்ளிட்ட பிற மாநிலங்களிலும்  மிக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர்நிலைகள் முழுவதும் நிறைந்து பல பகுதிகளில் சேதமாகின.




இந்த நிலையில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


அதன்படி, ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஐந்தாம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் இன்று முதல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.


அதேசமயம் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்