கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலர் நியமனம்

Meenakshi
Jan 13, 2024,05:52 PM IST

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனைய பணிகளை மேலும் சிறப்பாக்கும் வகையில், புதிய தலைமை நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமை நிர்வாக அலுவலராக ஜே. பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்த நியமனம் தொடர்பான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.


சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு. க. ஸ்டாலின்  திறந்து வைத்தார். 




புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி , அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும், வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாமல், ஆம்னி பேருந்துகளுக்கும் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் செல்லவும், நகரிலிருந்து இங்கே வரவும் வசதியாக உள்ளூர்ப் பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.


மெட்ரோ ரயில் நிலையமும் , விமான நிலையத்திலிருந்து இங்கு வரை விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளது. அதேபோல கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டமும் உள்ளது.  இவையும் வரும்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை நிர்வாக அலுவலராக ஜே.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் மாவட்ட வருவாய் அலுவலராக  ஜே. பார்த்திபன் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிளாம்பாக்கம் மட்டுமல்லாமல் குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தையும் சேர்த்து இவர் நிர்வகிப்பார்.


கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் என்பதால், நடைமுறை பிரச்சினைகள் வெளிப்பட்டு வருகின்றன. அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கடி இங்கு வந்து பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்கிறார். போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளும் அடிக்கடி வந்து பார்க்கின்றனர். தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவும் இன்று பஸ் நிலையம் வந்திருந்தார்.


தற்போது புதிய தலைமை நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பதால் பிரச்சினைகள் உடனுக்குடன் அட்டென்ட் செய்யப்பட்டு அதற்கு தீர்வு காண்பதும் விரைவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.