மொபைல் போனை தலைக்கு பக்கத்தில் வைத்து தூங்காதீர்கள்.. ஆப்பிள் நிறுவனம் அறிவுரை

Aadmika
Aug 24, 2023,09:47 AM IST
நியூயார்க் : மொபைல் போன்களை அருகில் வைத்து தூங்க வேண்டாம் என பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது வாடிக்கையாளர்களை நேரடியாக எச்சரித்துள்ளது.

மொபைல் போன்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினால் எந்த மாதிரியான உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என ஏற்கனவே பல கட்ட ஆய்வுகள் நடத்தி, மொபைல் போன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பலரும் தங்களுக்கு அருகிலும், தலையணைக்கு கீழும் மொபைல் போன்களை வைத்து தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.



இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மொபைல் போன்களை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம். குறிப்பாக அருகிலேயே சார்ஜ் போட்டபடி வைக்க வேண்டாம் என வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. காற்றாட்டம் உள்ள சூழலில், மே���ைகள் போன்ற தட்டையான இடத்தில் வைத்து மட்டுமே சார்ஜ் போடுங்கள்.

போர்வைகள், தலையணைகள் அல்லது உங்களின் உடல் போன்ற மென்மையான இடங்களில் வைத்து சார்ஜ் போடாதீர்கள்.

ஐபோன்கள், சார்ஜ் செய்யப்படும் போது அதிலிருந்து வெப்பம் வெளியேறும். இந்த வெப்பம் கடத்தப்படுவதற்கு சரியான இடம் கிடைக்காத போது அவைகள் எளிதில் தீப்பற்றவோ, வெடிக்கவோ அதிக வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் பெரும்பாலும் வைத்து சார்ஜ் போடும் தங்களின் தலையணை அதிக ஆபத்து நிறைந்த இடங்களில் ஒன்றாகும். 

பவர் அடாப்டர், வயர்லெஸ் சார்ஜர்கள், போன்கள் ஆகியவற்றை போர்வை, தலையணை அல்லது உங்களின் உடலுக்கு அடியில் வைத்து தூங்காதீர்கள். இவைகள் பவர்களை சேமித்து வைக்கக் கூடியவை. ஐபோன், சார்ஜர், அடாப்டர் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தாத சமயத்தில் சார்ஜ் செய்வதற்கு பயன்படுத்தும் இடத்தை விட தூரமாக வையுங்கள். பழுதான கேபிள்கள் அல்லது சார்ஜர்களை ஈரபதம் உள்ள பகுதிகளில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்றும் ஆபிள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.