நாங்கள் பாஜக.,வுடன் எந்த காலத்திலும் சேர மாட்டோம்.. அடித்துச் சொன்ன சரத்பவார்

Aadmika
Aug 14, 2023,10:20 AM IST
மும்பை : எங்கள் கட்சி ஒரு போதும் பாஜக.,வுடன் இணையாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாகவும், பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் சரத் பவார் கலந்து கொண்டதாலும் அவர் பாஜக.,வுடன் இணைய உள்ளதாக தகவல் பரவியது. மற்றொரு புறம் எதிர்க்கட்சிகளின் இ-ந்-தி-யா கூட்டணியின் முதல் இரண்டு ஆலோசனை கூட்டத்திலும் சரத் பவார் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் எதிர்க்கட்சிகள் அணியில் இல்லாமல் பாஜக.,விற்கு ஆதரவாக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.



இந்நிலையில் நேற்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்ட சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் சரத் பவார். அப்போது பேசிய அவர், நிறைய நலம் விரும்பிகள் நாங்கள் பாஜக.,வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டு வருகிறார்கள். ஆனால் நாங்கள் எந்த நிலையிலும் பாஜக.,வுடன் இணைய மாட்டோம். பாஜக.,வின் கொள்கைகள் எங்களுக்கு ஒத்துப் போகாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், எங்களுக்குள் சிலருக்கு மாற்று கருத்து உண்டு. எங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம் என சிலருக்கு சந்தேகம் உள்ளது. அதனால் தான் எங்களுக்குள் பேசி முடிவு செய்தோம். அஜித் பவார் உடனான சந்திப்பில் எந்த ரகசியமும் கிடையாது. அவர் எனது உறவினர், பவார் குடும்பத்தில் ஒருவர். நான் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கக் கூடியவன். அதனால் நான் எனது குடும்ப உறுப்பினர்கள் எவரையும் சந்திப்பதில் எந்த காரணமும் கிடையாது. சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

அஜித் பவார் - சரத் பவாரின் ரகசிய சந்திப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். அவர்கள் எப்போது, எங்கு சந்தித்தார் என்று கூட எனக்கு தெரியாது என்றார்.