மனித மூளையில் சிப்... "நினைத்ததை முடிப்பவன் நான் நான் நான்".. மிரட்டும் நியூராலிங் வெற்றி

Meenakshi
Mar 22, 2024,08:22 AM IST

கலிபோர்னியா: எலான் மஸ்க்கின்  நியூராலிங்க் நிறுவனத்தின் சோதனைத் திட்டத்தின் கீழ், மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர், தன மன ஓட்டத்துக்கு ஏற்ப கம்ய்யூட்டரில் வீடியோ கேம்  விளையாடி வருகிறார். இதன் மூலம், இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இன்றைய நவீன உலகில் பல வியத்தகு விந்தைகள் நடந்த வண்ணம் உள்ளன. நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் வளர்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தொழில் நுட்பத்துறையில் முன்னோடியாக திகழும் எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.




வழக்கமாக மூளைதான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். அதுதான் இயற்கை. ஆனால் மூளையை  கட்டுப்படுத்துவதே எலான் மஸ்க் டீமின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் நரம்பியல் மருத்துவத்தில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.  முதலில் குரங்குகளுக்கு சிப் பொருத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்த நிலையில், தற்பொழுது மனித மூளையில் சிப் பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 


அதன்படி மனிதனின் சிந்தனை மற்றும் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இணைப்பை உருவாக்கும் விதமாக இந்த சிப் மனித மூளையில் பொருத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது.


முதன் முதலில் மூளைக்குள் சிப் பொருத்தப்பட்ட நபர் தற்போது தனது மனதில் நினைக்கும் சிந்தனைகள் மூலம் கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடி வருகிறார். இந்த வீடியோவை நியூராலிங்க் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இவரது பெயர் நோலண்ட் அர்பாக். 29 வயதான, இவருக்கு சமீபத்தில் ஒரு விபத்து நடந்துள்ளது. அந்த விபத்தில் இவரது மூளைக்கு செல்லும்  நரம்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபர் சிப் பொருத்தப்பட்டு அதன் மூலம் லேப்டாப்பில் வீடியோ கேம்ஸ், செஸ் போட்டிகளை தனது சிந்தனை மூலம் விளையாடியுள்ளார். 


அவர் தனது சிந்தனையின் அடிப்படையில், லேப்டாப்பில் கர்சாரை நகர்த்தி செஸ் விளையாடி வருகிறார்.