மீண்டும் மீண்டுமா... யாருக்காக இந்த போஸ்ட்?... சேம் சைட் கோல் போடும் எஸ்.வி.சேகர்!

Aadmika
Apr 17, 2023,12:51 PM IST

சென்னை : நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் ட்விட்டரில் பதிட்டுள்ள போஸ்ட்டை வைத்து, நெட்டிசன்கள் அவரை கேள்வி கேட்டும், கிண்டல் செய்தும் வருகின்றனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுக.,வின் ஊழல் மற்றும் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலைக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய திமுக, ரூ.500 கோடி நஷ்டஈடும் கேட்டுள்ளது. ஆனாலும் அண்ணாமலை விடாமல் தொடர்ந்து திமுக.,விற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். இந்த ஊழல் பட்டியல் தொடர்பாக சிபிஐ.,யில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். 



அதிமுக., முன்னாள் அமைச்சர்களும் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் திமுக பற்றி குறிப்பிட்ட அண்ணாமலை, திமுக.,வின் சிவப்பு பாதை திறந்து விட்டதாக கூறி இருந்தார். அதேபோல முன்பு விமானத்தில் அவசர கால கதவைத் திறக்கப் போய் பெரும் சர்ச்சையில் அண்ணாமலையும், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவும் சிக்கினர். இந்த விவகாரத்தில் பின்னர் தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிக் கொடுத்ததால் அது அமுங்கிப் போனது.

இந்த நிலையில் இதையெல்லாம் மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக பாஜக.,வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

விமானத்தில் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட எக்சிட் கதவு பக்கத்தில் அமர்ந்த படி எடுத்த செல்ஃபியை வெளியிட்டுள்ள எஸ்.வி.சேகர், டேக் ஆஃப் செய்ய ரெடி. இதில் உள்குத்து ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். பாஜக.,வில் இருந்து கொண்டு அவரது கட்சியை சேர்ந்த ஒருவரையே மறைமுகமாக கிண்டல் செய்வது போல் போஸ்ட் பதிவிட்டுள்ளாரே... வேண்டுமென்றே அந்த சீட்டில் உட்காந்து செஃபி எடுத்து பதிவிட்டுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.