இந்தியாவைப் போலவே.. நேபாளத்திலும் டிக்டாக்குக்குத் தடை!

Su.tha Arivalagan
Nov 15, 2023,10:26 AM IST

காத்மாண்டு: இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதைப் போலவே, நேபாளத்திலும் டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ளது.


சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் டிக்டாக் உள்ளதால் அது தடை செய்யப்படுவதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.


சீனாவைச் சேர்ந்த ஆப்தான் டிக்டாக். இந்தியாவில் இது மிகப் பிரபலமாக ஒரு காலத்தில் இருந்தது. தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு டிக்டாக் வீடியோவில்தான் விழ வேண்டியிருந்தது. நம்ம ஊரில் ஜிபி முத்து, திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா போன்றோர் பிரபலமானதே இந்த டிக்டாக் வீடியோக்கள் மூலமாகத்தான்.




செல்லை ஆன் செய்தாலே, ஏலெ செத்த பயலே.. நாறப் பயலே என்ற வசனங்கள்தான் காதில் வந்து விழும். அந்த அளவுக்கு டிக் டாக்கிலேயே நம்மவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒருநாள் அதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. 


இந்தியாவில் மட்டுமல்ல, வேறு பல நாடுகளிலும் கூட டிக்டாக் இல்லை. தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது நேபாளமும் சேர்ந்துள்ளது.


சமீபத்தில்தான் புதிதாக ஒரு சட்டத்தை நேபாள அரசு உருவாக்கியது. அதன்படி வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக வலைதள ஊடகங்கள் நேபாளத்தில் அலுவலகம் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத  ஊடகங்கள் நேபாளத்தில் செயல்பட அனுமதி இல்லை என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் தற்போது டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் மாண்டனா மாகாணத்திலும் டிக்டாக் தடை செய்யப்பட்டது. இதுகுறித்து நேபாள தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரேகா சர்மா கூறுகையில், டிக்டாக் வலைதளம், அவதூறான விஷயங்களைப் பரப்புகிறது. சமூக நல்லிணக்கத்துக்கு இது கேடு விளைவிக்கும். எனவே அது தடை செய்யப்படுகிறது என்றார்.