வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை  ஜங்ஷன்.. பல ரயில்கள் ரத்து.. சில ரயில்கள் மதுரையிலிருந்து புறப்படும்

Su.tha Arivalagan
Dec 18, 2023,06:54 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில் நிலையம் வெள்ளத்தில் மிதப்பதால் பல ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. பல ரயில்கள் மதுரையிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல்லை மாநகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிலான வெள்ளத்தால் தாமிரபரணி கொந்தளித்துக் காணப்படுகிறது. ஊருக்குள் புகுந்த வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை. 


ரயில் நிலையமும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன் காரணமாக பல ரயில்களை தெற்கு ரயில்வே இன்று ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட ரயில்கள் விவரம்:




நெல்லை - செங்கோட்டை இடையிலான அனைத்து முன்பதிவு வசதி இல்லாத சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல நெல்லை -  நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.


வாஞ்சிமணியாச்சி -  திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீவைஷ்ணோதேவி கத்ரா - நெல்லை எக்ஸ்பிரஸ்  இரு மார்க்கத்திலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.


நெல்லை - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுதவிர பல ரயில்கள் மதுரையிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நெல்லைக்கும் - மதுரைக்கும் இடையை இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அந்த ரயில்கள் விவரம்:


நாகர்கோவில் - கோயம்புத்தூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - தாம்பரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - தாதர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் - மைசூரு எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்.


பிற ஊர்களிலிருந்து புறப்படும் ரயில்கள்



நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லிலிருந்து  கிளம்பும். அதேபோல திருநெல்வேலி - ஜாம் நகர் எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பும். ஜாம் நகர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் சென்டிரலுக்கும், - நெல்லைக்கும் இடையே ரத்து செய்யப்படுகிறது.  கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லோடு நிறுத்தப்படும்.


செங்கோட்டை - தாம்பரம் இடையிலான சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று மட்டும்  தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக இயக்கப்படும்.