தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தேஜகூ வெல்லும்.. ஆட்சி அமைக்கும்.. டிடிவி தினகரன்

Meenakshi
Jun 12, 2024,05:54 PM IST

தஞ்சாவூர்: வருங்காலத்தில் தமிழ்நாட்டில்  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லாததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:


இந்த  இயக்கத்தை எந்த நோக்கத்திற்காக தொடங்கினோமோ, அந்த காரணத்தில் எந்த விதத்திலும் அணு அளவு மாற்றம் இல்லை. அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை.  அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பதே தவறான கேள்வி.  ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். 




ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி இடம் இருப்பதால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்கின்றனர். அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும்போது அது பற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம்.


ஆனால், அதிமுகவுக்கு 2019 ஆம் ஆண்டு 20 தொகுதிகளில் வெற்றி பெற்ற வாக்கு விகிதம் இந்த தேர்தலில் குறைந்துள்ளது. திமுகவின் பி டிமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக அதிமுக தங்களது வேட்பாளர்களை நிறுத்தியது. என்றாலும், இதை எல்லாம் நான் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணி 18.50 சதவீத வாக்கு விகிதத்தை பெற்றுள்ளது. 


வருங்காலத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லாததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களிக்கின்றனர். ஆனால், அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்காததால் அக்காட்சி வாக்கு விதம் குறைந்துள்ளது.


தமிழக அரசு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மூலமாக பிடிவாதமாக இருக்கும் கர்நாடக முதல்வர் துணை முதல்வர் உடன் பேசி தமிழகத்திற்குரிய காவிரி நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர்ந்து கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற்று தர வேண்டும். மாறாக டெல்லியில் போய் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்றார்.