Erode East: நாங்களும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிக்கிறோம்.. அண்ணாமலை அறிவிப்பு
சென்னை: அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து தற்போது பாஜகவும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் திமுக கூட்டணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் கடுமையான போட்டி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியல் வித்தியாசமான சூழலை நோக்கிப் போகத் தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கியமான கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து வருகின்றன.
அதிமுக முதலில் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் கூட கொங்கு மண்டலத்தில் தங்களுக்குப் பலம் உள்ளதாக அதிமுக கூறி வரும் நிலையில் அங்கு நடைபெறும் இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இப்படித்தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அதிமுக புறக்கணித்திருந்தது.
அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது. விக்கிரவாண்டி தேர்தலையும் தேமுதிக புறக்கணித்திருந்தது.
அதேசமயம், பாஜக இத்தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுகவுடன் போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்து தனது நிலையை ஸ்திரப்படுத்த முயலும் என்றும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் பாஜகவும் தற்போது தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.
மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே பிரதான கட்சிகளாக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி நெருக்கடி தருமா என்பது சந்தேகம்தான். அதேசமயம், பெரியாரை கடுமையாக சீமான் விமர்சித்து வரும் சூழலில் அவர் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற நாம் தமிழர் கட்சி முயலக் கூடும். அப்படி நடந்தால் அது அக்கட்சிக்கும் புதிய மைலேஜ் கிடைக்க வாய்ப்பாக அமையும் என்பதால் இதுவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான மேஜிக்கை எதிர்பார்க்க வாய்ப்பில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.
பெரிய கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்து விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியிலும், விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் போல மிகப் பெரிய வெற்றியை திமுக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பிரதான கட்சிகள் இப்படி தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்