"38 பெருசா.. 26 பெருசா.. தக்காளி சாதம் சாப்பிட முடியலைங்க என்னால".. ஜெயக்குமார் அதிரடி!

Su.tha Arivalagan
Jul 19, 2023,04:38 PM IST
சென்னை: பாஜக கூட்டணியில் 38 கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் 26 பேர்தான் உள்ளனர். 38 பெருசா, 26 பெருசா என்று கேட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசினார். அப்போது அவரிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில், டெல்லியில்  தேசிய ஜனநாயகக் கூட்டணி  கூட்டம் சிறப்பாக நடந்தது. அதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப் பெரிய  முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுகதான் மிகப் பெரிய சக்தி என்பது இந்திய அளவில் தெரிந்து விட்டது. அதனால்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்றார் ஜெயக்குமார்.



எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, 38 பெருசா, 26 பெருசா. அவங்க 26 நாங்க 38. அப்ப 38தான் பெருசு. இதுதான் பலம் வாய்ந்த கூட்டணி. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல மிகப் பெரிய வெற்றி பெறுவோம். மகத்தான வெற்றியைப் பெறுவோம்.  தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார் ஜெயக்குமார். 

தக்காளி விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தக்காளி விலை உயர்வால் எங்க வீட்டில் தக்காளி சாதமே சாப்பிட முடியவில்லை என்று கூறி கலகலக்க வைத்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓ.பி.எஸ். அழைக்கப்படாதது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில்,  ஓபிஎஸ் யாருங்க.. அவரை எப்படி அழைப்பாங்க. அவர் தனி மனிதர், இயக்கம் கிடையாது. இயக்கத்தைத்தான் அழைப்பாங்க என்றார் ஜெயக்குமார்.