நவராத்திரி வந்தாச்சு.. 9 நாட்களிலும்.. என்ன வகையான நெய்வேத்தியங்கள் படைக்கணும்.. தெரியுமா?

Manjula Devi
Oct 03, 2024,04:35 PM IST

உலகையே தன் வசப்படுத்தி மக்களை அழித்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்கவே துர்கா தேவி நவராத்திரி நாட்களில் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தேவியை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுவது தான் நவராத்திரி. இந்த நவராத்திரி விழா ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வரும் அம்மாவாசை மறுநாள்   தொடங்கி 10 நாட்கள் வரை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பத்தாவது நாள் தசமி திதியுடன் நவராத்திரி விழா நிறைவடையும்.


துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்கள் ஆதி சக்தியாகவும், அடுத்து  3 நாட்களும் லட்சுமியாகவும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியாகவும், 10-வது நாள் விஜயதசமி அன்று சாமுண்டீஸ்வரியாகவும் வடிவமைத்து கோயில்களிலும் இல்லங்களிலும் பெண்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த வருடம் அக்டோபர் 4ஆம் தேதி அதாவது இன்று தொடங்கும் நவராத்திரி விழா அக்டோபர் 12ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 




இந்த நாட்களில் கோயில்கள் மற்றும் இல்லங்களில் ஒன்பது நாட்களும்  அம்பிகையை வடிவமைத்து அம்பிகைக்கு பிடித்தமான நெய்வேத்தியங்களை படைத்து தேவியின் அருளை பெற வழிபாடு நடத்தி வருகின்றனர். அப்போது மாலை நேரங்களில்  வீடுகள் முழுவதும் கொலு பொம்மைகளால் அலங்காரம் செய்து விளக்கேற்றி அம்மன் பாடல்களை பாசுரம் செய்து வழிபடுகின்றனர். அதேபோல் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், சிறு குழந்தைகள், பெண்கள் என ஒவ்வொருவரும் கொலு வைத்தவர்கள் வீட்டில் வந்து கொலுவை  பார்வையிட்டு பூஜைகளில் கலந்து கொண்டு  தேவியை வழிபாடு செய்கின்றனர். அப்போது வழிபாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அம்பிகைக்கு பிடித்தமான பிரசாதங்களை கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. 


இதுபோன்று உங்கள் வீட்டிலும் கொலு வைத்து அம்பியை வழிபட ஆசையா. ஆனால் கொலு வைக்க முடியவில்லையா. வைக்க முடியவில்லை என்றால் கூட  நவராத்திரி நடைபெறும் ஒன்பது நாட்களிலும் அம்பிகைக்கு பிடித்த நெய்வேத்தியங்களை படைத்து வீடுகளில் எளிமையான முறையில்  அம்பிகையை வழிபட்டு வந்தாலே முழு பலனும்  கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அப்படி நீங்களும் உங்கள் வீட்டில் கொலு வைக்கவில்லை என்றாலும் எந்த கடவுளுக்கு எந்த வகையான  பிரசாதங்கள் செய்ய வேண்டும் என்பது தெரிந்து கொள்ளுங்கள்.




முதல் நாள் – சுண்டல் மற்றும், வெண்பொங்கல்


இரண்டாம் நாள் – புளியோதரை


மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்


நான்காம் நாள் – கதம்ப சாதம் (அதாவது காய்கறிகள் மற்றும் அரிசி கலந்த கதம்ப சாதம்)


ஐந்தாம் நாள் - தயிர்சாதம், பொங்கல்


ஆறாம் நாள் - தேங்காய் சாதம்


ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்


எட்டாம் நாள் - பால் சாதம்


ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரி பால், வெல்லம் கலந்த சர்க்கரைப்  பொங்கல்)


இந்த 9 நாட்களும் ஒன்பது விதமான நெய்வேத்தியங்களை அம்பிகைக்கு படைத்து நாமும் அம்பிகையின் அருளை பெறுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்