நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

Manjula Devi
Sep 19, 2024,01:10 PM IST

சென்னை:   தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை கண்காட்சி செப்டம்பர் 21 முதல் தொடங்க உள்ளது. 


மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள்.இந்த திட்டத்தின் மூலம்  பெண்கள் சுய தொழிலுக்கான வருவாய்களை ஈட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை பயன்படுத்தி வருகிறது. மேலும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில் மாவட்டம் தோறும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நவராத்திரி விற்பனை கண்காட்சி ஒவ்வொரு வருடமும்  நடத்தப்பட்டு வருகிறது. 




நவராத்திரி விழா தொடங்கவுள்ளதைத்  தொடர்ந்து தற்போது இந்த விற்பனைக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் சேலைகள், பட்டுப் புடவைகள், கவரிங் நகைகள், வாலை நார்களால் செய்யும் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், மண்பானைகள், கைவினைப் பொருட்கள், ஆர்கானிக் சோப்பு வகைகள், சிறு தானியங்கள், ஊறுகாய் வகைகள், எண்ணெய் வகைகள், மூலிகை பொருட்கள், சிறுதானிய தின்பண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுவது வழக்கம். 


அந்த வரிசையில் இந்த வருடம் நவராத்திரி மற்றும் தீபாவளி விற்பனை கண்காட்சி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நவராத்திரி விற்பனை கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இங்கு சிறுதானியங்கள் முதல் நவராத்திரி கொலு பொம்மைகள் வரை விற்பனை செய்யப்பட உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்