இன்று நவராத்திரி 08ம் நாள் : அம்பிகையின் வடிவம், கோலம், நிறம், நைவேத்தியம் இது தான்

Aadmika
Oct 10, 2024,10:28 AM IST

சென்னை :  2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.




வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 08 ம் நாள் அக்டோபர் 10 ம் தேதி வருகிறது. நவராத்திரியின் மற்ற நாட்களை விட எட்டாம் நாள் மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாள் மிகவும் சக்தி மிகுந்ததாக கருதப்படுகிறது. நவராத்திரியின் எட்டாம் நாள் துர்காஷ்டமியாகும். இந்த நாளில் துர்கையின் சக்தி மிகவும் அதிகரித்து காணப்படுவதாக ஐதீகம். அதனால் இந்த நாளில் அம்பிகையிடம் பக்தர்கள் என்ன கோரிக்கை முன் வைத்தாலும் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.


நவராத்திரி 8ம் நாள் வழிபாட்டு முறை :


அம்பிகையின் வடிவம் - நரசிம்ம தாரினி

கோலம் - பத்ம வகை கோலம்

மலர் - ரோஜா

இலை - மருதாணி

நைவேத்தியம் - பால் சாதம்

சுண்டல் - மொச்சைப் பயறு சுண்டல்

பழம் - திராட்சை

நிறம் - பச்சை அல்லது அரக்கு


நவராத்திரியின் 8ம் நாளில் நவதுர்கை வழிபாட்டில் துர்கையின் மகாகெளரி வடிவத்தை வழிபட வேண்டும். இவளுக்கு ஊதா நிற வஸ்திரம் சாத்தி, தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும். இந்த அம்பிகையை வழிபடுவதால் பாவங்கள், துன்பங்கள் நீங்கும். அளவில்லாத நலன்களையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்கக் கூடியவள். பக்தர்களுக்கு தாயாக இருந்த அருளக் கூடியவள் மகாகெளரி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்