இன்று நவராத்திரி 5ம் நாள் : அம்பிகையின் வடிவம், கோலம், நிறம், நைவேத்தியம் இது தான்

Aadmika
Oct 07, 2024,11:03 AM IST

சென்னை :   2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.




வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 5ம் நாள் அக்டோபர் 07ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரியின் ஐந்தாம் நாள் பஞ்சமி திதியுடன் இணைந்து வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் மகாலட்சுமி தாயாரும், வாராஹியையும் வழிபடுவதால் வெற்றிகள் தேடி வரும். காரியங்களில் இந்த தேக்க நிலை, தடைகள் யாவும் விலகும்.


நவராத்திரி 5ம் நாள் வழிபாட்டு முறை :


அம்பிகையின் வடிவம் - மோகினி (வைஷ்ணவி)

கோலம் - பறவை வகை கோலம்

மலர் - மனோரஞ்சிதம்/ பாரிஜாதம்

இலை - திருநீற்றுப் பச்சை இலை

நைவேத்தியம் - தயிர் சாதம்

சுண்டல் - கடலை பருப்பு சுண்டல்

பழம் - மாதுளை

நிறம் - சிவப்பு


நவராத்திரியின் ஐந்தாம் நாளில் நவதுர்க்கை வழிபாட்டில் ஸ்கந்த மாதாவை வழிபட வேண்டும். சிங்க வாகனத்தில், மடியில் குழந்தை வடிவமான ஆறுமுகக் கடவுளை அமர்த்திக் கொண்டு, தன்னுடைய இரு கரங்களிலும் தாமரை பூவை ஏந்தி, கருணையே வடிவமாக, தாய்மை பொங்கும் முகத்துடன் காட்சி தரக் கூடியவள். இவளை வழிபடுவதால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும். இவளை சிவப்பு நிற மலர்கள் படைத்து, தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பாள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்