இன்று நவராத்திரி 4ம் நாள் : அம்பிகையின் வடிவம், கோலம், நிறம், நைவேத்தியம் இது தான்

Aadmika
Oct 06, 2024,12:53 PM IST

சென்னை : 2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.


வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 4ம் நாள் அக்டோபர் 06ம் தேதி வருகிறது. இது மகாலட்சுமி வழிபாட்டிற்குரிய முதல் நாளாகும். இந்த நாளில் மகாலட்சுமியை என்ன மலர்களால், எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




நவராத்திரி 4ம் நாள் வழிபாட்டு முறை :


அம்மனின் வடிவம் - மகாலட்சுமி

கோலம் -  படிக்கட்டு வகை கோலம்

மலர் - ஜாதிமல்லி

இலை - கதிர்பச்சை

நைவேத்தியம் - கதம்ப சாதம்

சுண்டல் - பட்டாணி சுண்டல்

பழம் - கொய்யா பழம்

நிறம் - கருநீலம்

ராகம் - பைரவி


நவ துர்க்கை வழிபாட்டில் நவராத்திரியின் 4ம் நாளில் கூஷ்மாண்டா தேவியை வழிபட வேண்டும். இவள் தன்னுடைய அழகிய புன்னகையால் அண்ட சராசரங்களையும் படைத்தவள் என சொல்லப்படுகிறது. கருணையின் வடிவமான இந்த அன்னையை வழிபடுபவர்களுக்கு தாய் போல் இருந்து அருள் செய்வாள். இவள் உஷ்ணமானவள் என்பதால் இவளுக்கு பால், தயிர் போன்ற குளுமை தரும் பொருட்களை நைவேத்தியமாக அளித்து வழிபடுவது சிறப்பு.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்