இன்று நவராத்திரி 3ம் நாள் : அம்பிகையின் வடிவம், கோலம், நிறம், நைவேத்தியம் இது தான்

Aadmika
Oct 05, 2024,10:10 AM IST

சென்னை :   2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.




வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 3ம் நாள் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையுடன் இணைந்து வருகிறது. இன்று சுவாதி நட்சத்திரம் சேர்ந்தே அமைந்துள்ளது. சுவாதி நட்சத்திரம், லட்சுமி நரசிம்மருக்குரிய நட்சத்திரமாகும். அதனால் இந்த நாளில் காலையில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றியும், தளிகை போட்டும், கோவிந்த நாமம் சொல்லி வழிபட வேண்டும். அதோடு, "ஓம் லட்சுமி நரசிம்மாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி, பானகம், கருப்பு சுண்டல் படைத்து வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். 


நவராத்திரி 3ம் நாள் வழிபாட்டு முறை :


அம்மனின் வடிவம் - வாராஹி

கோலம் - மலர் வகை கோலம்

மலர் - சம்பங்கி

இலை - துளசி

நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்

சுண்டல் - காராமணி சுண்டல்

பழம் - பலாப்பழம்

நிறம் - நீல நிறம்


அம்பிகையின் போர் படை தளபதியான வாராஹியை நவராத்திரியின் 3வது நாளில் வழிபட வேண்டும். இவள் வெற்றியை தரும் அம்பிகையாகவும், பக்தர்கள் கேட்ட வரங்களை தரும் தாயாகவும் விளங்குபவள். அதே போல் நவராத்திரியின் 3ம் நாளில் நவதுர்க்கை வழிபாட்டில் துர்க்கையின் சந்திரகாண்டா வடிவத்தை வழிபட வேண்டும். இவளுக்கு பால் பாயசம் படைத்து வழிபடுவது வழக்கம். இவளே அசுரர்களை வெற்றி கொண்ட தேவியாக கருதப்படுகிறாள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்