navratri 2023 day 4: நவராத்திரி 4ம் நாள் பூஜை, அலங்காரம், நைவேத்திய, நிறம் பற்றிய விபரம்

Aadmika
Oct 18, 2023,09:28 AM IST

சென்னை : நவராத்திரி என்பது பெண் சக்தியை ஒன்பது இரவுகள் வழிபடும் வழிபாட்டு முறையாகும். இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரிய வழிபாட்டு நாட்களாக சொல்லப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் முதல் நாளில் துர்க்கையை உமா மகேஸ்வரியாகவும், 2ம் நாளில் ராஜ ராஜேஸ்வரியாகவும், 3ம் நாளில் வராகி அம்மனாகவும் வழிபட்டு முடித்து விட்டோம்.


அக்டோபர் 18 ம் தேதியாகன இன்று நவராத்திரியின் 4ம் நாள். இன்று மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டிய நாள். பொதுவாக மகாலட்சுமி என்றதும் பணம், பொன், பொருளை தரும் தெய்வம் என்ற எண்ணம் தான் அனைவரின் மனதிலும் தோன்றும். ஆனால் உண்மையில் மகாலட்சுமி, மனநிம்மதியையும், நிறைவான மனதையும், ஆத்மார்த்தமான ஆனந்தமான வாழ்க்கை, பொலிவான முகம், மலர்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றை தரக் கூடியவள். எங்கு நிறைவான மனநிம்மதியும், பணமே இல்லாவிட்டாலும் முகத்தில் மலர்ச்சியும் உள்ளதோ அங்க தான் மகாலட்சுமி வாசம் செய்வாள்.




நவராத்திரியின் 4, 5, மற்றும் 6 ஆகிய நாட்கள் மகாலட்சுமிக்கு உரியவை என்பதால் இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளில் விளக்கு பூஜை செய்வது சிறப்பானதாகும். அதே போல் வரலட்சுமி நோன்பு அன்று விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் விரதம் இருந்து வரலட்சுமி பூஜையை செய்யலாம். 


நவராத்திரியின் 4ம் நாளில் அம்பிகையை லட்சுமி தேவியாக அலங்கரிக்க வேண்டும். கருநீல நிறத்திலான உடை உடுத்தி, மலர்களில் ஜாதிமல்லியும், இலைகளில் கதிர்பச்சையும் கொண்டு அம்பிகையை அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக கதம்ப சாதமும், சுண்டலில் பட்டாணி சுண்டலும், பழங்களில் கொய்யா பழமும் படைத்து வழிபட வேண்டும். இன்று படிக்கட்டு வகை கோலமிட வேண்டும். மகாலட்சுமி அஷ்டகம், மகாலட்சுமி துதி, கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவை படித்து இந்த நாளில் அம்பிகையை வழிபட வேண்டும். 




நவராத்திரியின் 4 ம் நாளில் லட்சுமி தேவியை வழிபடுவதால் மன நிம்மதி, மலர்ச்சி ஏற்படும். வசீகரமான முகம் ஏற்படும். கடன் நீங்கும், செல்வம் சேரும், நிதி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.