தீவிர அரசியலிலிருந்து விலகுகிறேன் .. புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.. வி.கே.பாண்டியன் அறிவிப்பு!

Su.tha Arivalagan
Jun 09, 2024,10:28 PM IST

புவனேஸ்வர்: தீவிர அரசியலை விட்டு விலகுகிறேன். யாருடையாவது மனதை நான் புண்படுத்தியிருந்தாலோ அல்லது எனது அரசியல் செயல்பாடுகளால் பிஜூ ஜனதாதளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.


மதுரையைப் பூர்வீகமாக கொண்டவர் வி.கே.பாண்டியன். ஒடிசா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது மக்களின் அன்பைப் பெற்றவர். முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நிழல் போல விளங்கியவர். இவர் மூலமாக நவீன் பட்நாயக் பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சாதனைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றியிருந்தார். 


இந்த நிலையில் லோக்சபா தேர்தல் மற்றும் ஒடிஷா சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தனது ஐஏஎஸ் பணியை விட்டு விலகிய வி.கே.பாண்டியன், பிஜூ ஜனதாதளம் கட்சியில்  இணைந்தார். நவீன் பட்நாயக்குடன் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் ஒரு தமிழர் ஒடிஷாவின் முதல்வராக முயல்கிறார்.. அது சரியா என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்த பிரச்சாரம் அந்த மாநில மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.




இந்த எதிர்மறைப் பிரச்சாரத்தால் பிஜூ ஜனதாதளத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தேர்தலில் பிஜூ ஜனதாதளம் ஆட்சியை இழந்தது. பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டது. இதையடுத்து தற்போது வி.கே.பாண்டியன் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியை ஒன்றைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன், சாதாரண கிராமத்திலிருந்து வந்தவன். சிறு வயதிலிருந்தே ஐஏஎஸ் சேர வேண்டும் எனபதே எனது கனவு. அது பூரி ஜகன்னாதரால் நிறைவேறியது. ஒடிஷாவுக்கு வந்தது முதல் எனக்கு அபரிமிதமான அன்பைக் கொடுத்தனர் ஒடிசா மக்கள். மக்களுக்காக கடுமையாக உழைக்கவே முயன்றேன். 


12 வருடங்களுக்கு முன்பு முதல்வர் அலுவலகத்தில் சேர்ந்தேன். எனது குரு நவீன் பட்நாயக்குடன் இணைந்து பணியாற்றியது கெளரவமானது. வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் அது. ஒடிஷா மக்களின் அன்பை எப்போதும் மறக்க முடியாது. சுகாதாரம், கல்வி , விளையாட்டு, முதலீடு உள்ளிட்ட பல துறைகளில் நவீன் பட்நாயக் சாதனை படைத்தார். அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் நிறைய செய்துள்ளார்.


கோவிட் காலத்தின்போது கிட்டத்தட்ட ஒடிஷாவின் 30 மாவட்டங்களுக்கும் சென்றுள்ளார் முதல்வர். இந்த சமயத்தில்  2 சூப்பர் புயல்களையும் நாம் சந்தித்தோம். மக்களின் உயிரைக் காப்பாற்ற கடுமையாக பாடுபட்டோம். பிஜூ ஜனதாதளத்தில் நான் சேர்ந்தது நவீன் பட்நாயக்குக்கு உதவுவதற்காக மட்டுமே. அவருக்கு உதவுவது மட்டுமே எனது வேலை. கடந்த 12 வருடமாக அதிகாலை முதல் நள்ளிரவு வரை பணியாற்றி வந்தேன்.


எனக்கோ, எனது குடும்பத்துக்கோ உலகில் வேறு எங்குமே சொத்துக்கள் இல்லை. எனது பெரிய சம்பாத்தியம் என்றால் அது ஒடிசா மக்களின் அன்பும், பாசமும்தான். அரசியலில் நான் சேர ஒரே காரணம் நவீன் பட்நாயக்குக்கு உதவுவதே. இப்போது நான் தீவிர அரசியலிலிருந்து விலகுகிறேன். நான் யாரையும் புண்படுத்தியிருந்தேன் என்றால் அதற்காக வருந்துகிறேன். எனது செயல்களால் பிஜூ ஜனதாதளம் பாதிக்கப்பட்டிருந்தால் என்னுடைய மன்னிப்புகளையும் கோரிக் கொள்கிறேன்.  ஒடிசா எப்போதும் எனது இதயத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார் வி.கே.பாண்டியன்.