"அது கசக்குது.. இதுதான் இனிக்குது".. தைவானை விட்டு மெல்ல நகர்ந்து சீனா பக்கம் தாவிய நவ்ரு!

Su.tha Arivalagan
Jan 15, 2024,01:23 PM IST

சிட்னி: தைவான் நாட்டுடனான உறவை துண்டிப்பதாக நவ்ரு தீவு அறிவித்துள்ளது. தைவானை விட்டு விலகிய கையோடு சீனாவுடன் உறவை அது புதுப்பித்துக் கொண்டுள்ளது.


பிசிபிக்  பிராந்தியத்தில் உள்ள மிக மிக சிறிய தீவுதான் இந்த நவ்ரு. இதுவரை தைவானுடன் அது உறவு வைத்திருந்தது. தற்போது அதைத் துண்டித்து விட்டு சீனாவுடன் உறவு வைப்பதாக அறிவித்துள்ளது.  சீனாவை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் அந்த தீவு நாடு அறிவித்துள்ளது.


இதுதொடர்பான அறிவிப்பை நவ்ரு தீவின் அதிபரான டேவிட் அடியாங் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.  இனிமேலும் நாம் தைவானை தனி நாடாக கருதத் தேவையில்லை. மாறாக சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அதை நாம் பார்க்கிறோம். சீனாவை தனி நாடாக அங்கீகரிக்கிறோம். தைவானுடன் இனியும் எந்த உறவையும் நாங்கள் வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.




தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ள வெகு சில நாடுகளில் நவ்ருவும் ஒன்று. தற்போது நவ்ரு அதிலிருந்துத விலகியுள்ளது தைவானுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது மொத்தம் 12 நாடுகள்தான் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


நவ்ரு நாடானது மிக மிக குட்டித் தீவு நாடாகும். மொத்தமே 12,500 பேர்தான் அந்த நாட்டில் வசிக்கிறார்கள்.  கடந்த 2019ம் ஆண்டு இப்படித்தான் சாலமன் தீவு நாடும் தைவானை விட்டு விலகி சீனா பக்கம் வந்தது.


ஆப்பிரிக்கக் கண்டத்தில் எஸ்ட்வானா, லத்தீன் அமெரிக்காவில் பெலிஸ், குவாத்திமாலா, ஹைத்தி, பராகுவே  ஆகிய நாடுகள் தைவானை அங்கீகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.