வாய்மையும் நேர்மையும் வாய்க்கும் அண்ணலே.. வைரமுத்து  கவிதாஞ்சலி

Meenakshi
Oct 02, 2023,10:58 AM IST

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து கவிதையை இணையதள பக்கத்தில் வெளியீட்டு மகாத்மாவுக்கு சல்யூட் செய்துள்ளார்.


மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள்  கொண்டாடப்படுகிறது.




சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்தி நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பெருமைக்குரிய தலைவர்களுக்கு தலைமை தாங்கியவர் மகாத்மா காந்தி. மகாத்மா என்ற பட்டத்தை, வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் காந்தியடிகளாருக்கு  வழங்கினார். 


உலக வரலாற்றின் பக்கங்களில் கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரப் போரை நடத்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் மகாத்மா காந்திக்கு உலக வரலாற்றில் தனி இடம் உண்டு. அவருடைய தனித்துவமான கொள்கைகளால் உலகிலுள்ள  பெருந்தலைவர்களான மார்ட்டின் லூதர் கிங், ஜேம்ஸ் லாசன், நெல்சன் மண்டேலா போன்றவர்களால்  போற்றப்பட்டவர். 


இன்றளவும் உலகம் முழுவதும் அனைவரின் மனத்திலும் நிலைத்து நிற்கும் உன்னத தலைவர். இவரின் நினைவு தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரி அஞ்சலி:


"சமூகத்துக்கு நீங்கள்

சொல்ல விரும்பும் சேதி என்ன?"

இது கேள்வி


"என் வாழ்வே 

நான் சொல்ல விரும்பும் சேதி"

இது உங்கள் பதில்


எத்துணை தலைவர்களுக்கு

இப்படிச் சொல்லும்

வாய்மையும் நேர்மையும்

வாய்க்கும் அண்ணலே!


வணங்குகிறேன்


ஆனால் ஓர் ஐயம்

நல்லது கொல்லப்படும் என்பதும்

உங்கள் வாழ்வின் சேதியோ

உத்தமரே!

என்று எழுதியுள்ளார்.


தலைவர்கள் அஞ்சலி


டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தல் பிரதமர்  மோடி அஞ்சலி செலுத்தி தேசப் பிதாவுக்கு மரியாதை செய்தார். காங்கிரஸ் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் போன்வர்களும் மரியாதை செய்தனர். 


அன்று சுதந்திரத்திற்குக் காந்தி தேவைப்பட்டார்.. இன்றும் கூட பல விஷயங்களில் நாட்டுக்குக் காந்தி தேவைப்படுகிறார்..   ஊழல், மதவாதம், சாதியம், பாலியல் பலாத்காரம், வன்கொடுமை, தீண்டாமை போன்ற என்னற்ற கொடுமைகள் இன்று தலைவித்தாடுகின்றன. இவற்றை போக்க இன்னொரு காந்தி எப்போது வருவார் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


அவர் வருவாரா??