நாசாவின் ஆர்ட்டிமிஸ் 2 திட்டம்... நிலவுக்குப் போகும் முதல் பெண்.. முதல் கருப்பர் இனத்தவர்!

Su.tha Arivalagan
Apr 04, 2023,03:48 PM IST
வாஷிங்டன்: நாசா நிறுவனம் தனது புதிய நிலவுப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆர்ட்டிமிஸ் 2 என்ற இந்த நிலவுப் பயணத் திட்டத்தில் மொத்தம் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒருவர் பெண் என்பதும், இன்னொருவர் கருப்பர் இனத்தவர் என்பதும் முக்கியமானது.

நிலவுக்கு இதுவரை மனிதர்களை அனுப்பிய ஒரே நாடு அமெரிக்காதான். அதுதான் மனிதர்கள் நிலவுக்குப் போன முதல் பயணமும் கூட. ஆம்ஸ்டிராங்கின் காலடிதான் நிலவில் பட்ட முதல் மனிதக் காலடி. அதன் பிறகு மனிதர்கள் யாரும் நிலவுக்குப் போனதில்லை.



இந்த முதல் பயணம் நடைபெற்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது 2வது மனித நிலவுப் பயணத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.  நான்கு பேர் அடங்கிய இந்தக் குழுவில் முதல் முறையாக ஒரு பெண் இடம் பெற்றுள்ளார். அவரது பெயர் கிறிஸ்டியானா கோச். இவர் ஒரு பொறியாளர். நீண்ட நேரம் விண்வெளி கப்பலில் பயணம் செய்தவர் என்ற சாதனையை இவர் வைத்திருக்கிறார். விண்ணில் நடந்த முதல் பெண்மணி என்ற பெயரும் இவருக்கு உண்டு.  இவர்தான் நிலவுக்குப் போகும் முதல் "பெண் நிலவாக" உருவெடுத்துள்ளார்.

அவருடன் விக்டர் குளோவர் என்ற கருப்பர் இனத்தைச் சேர்ந்தவரும் நிலவுப் பயணத்தில் இடம் பெற்றுள்ளார்.  இதுவரை கருப்பர் இனத்தவர் யாரும் நிலவுக்குப் போனதில்லை. மற்ற இருவர் ஜெரிமி ஹேன்சன் (கனடா நாட்டவர்),  ரீட் வைஸ்மேன் (அமெரிக்க கடற்படை போர் விமானி)

இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆர்ட்டிமிஸ் 2 குழுவினர் நிலவுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.  இது பத்து நாள் பயணமாகும். நிலவில் இவர்கள் இறங்க மாட்டார்கள். மாறாக நிலவைச் சுற்றி வந்து பின்னர் பூ மிக்குத் திரும்புவார்கள். மொத்தம் 20 லட்சம் கிலோமீட்ட��் தொலைவுக்கு இவர்கள் பயணம் செய்யவுள்ளனர். நம்மால் பார்க்க முடியாத நிலவுப் பகுதியில் கிட்டத்தட்ட 10,300 கிலோமீட்டர் தொலைவுக்கு இவர்கள் பயணிக்கவுள்ளனர் என்பது திரில்லான ஒரு தகவல். மனிதர்கள் இந்தப் பகுதிக்கு சென்றதில்லை. எனவே இது பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தால், அடுத்த ஆண்டு ஆர்ட்டிமிஸ் 3  திட்டத்தை அமல்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதிலும் ஒரு பெண் இடம் பெறுவார். அந்த குழு நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வருடம் ஒரு டீமை நிலவுக்கு அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் முதல் நிலவுப் பயணம் அப்போதைய சோவியத் யூனியனுடனான பனிப்போரில் பிறந்ததாகும். விண்வெளிக்கு முதன் முறையாக  யூரி ககாரின் என்பவரை அனுப்பி சோவியத் யூனியன் அமெரிக்காவை அதிர வைத்தது. அவர்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ஆவார். அதற்குப் போட்டியாகத்தான் அப்போலா திட்டத்தை அறிவித்து நிலவுக்கு தனது நாட்டவரை அனுப்பி பதிலடி கொடுத்தது அமெரிக்கா என்பது நினைவிருக்கலாம்.