"உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட.. ஹூம்! என்னவோ போங்க சார்".. கலாய்க்கும் நாராயணன் திருப்பதி!

Su.tha Arivalagan
Dec 10, 2023,05:48 PM IST

சென்னை: மழை நீர் வடிகால் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்கள் பேசிய பேச்சுக்களை கோட் செய்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கலாய்த்துள்ளார்.


சென்னை மாநகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. மழை தொடங்குவதற்கு முன்பே இந்த சர்ச்சையை சிலர் ஆரம்பித்து விட்டனர். 4000 கோடி அளவுக்கு மழை நீர் வடி கால் பணிகள் செய்திருப்பதாக திமுக அரசு சொல்லியுள்ளது. இந்த மழை வெள்ளத்தின்போது அது தெரிந்து விடும் என்று முன்பே சொல்ல ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக பாஜக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டு வந்தனர்.




சமீபத்திய மிச்சாங் புயலால் ஏற்பட்ட மிகப் பெரிய கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி சென்னை நகரமே மிதந்தது. இன்னும் கூட சில இடங்களில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. இந்த நிலையில் மழை நீர் வடிகால் பிரச்சினையை பெரிய அளவில் பேசு பொருளாக்கி விட்டனர் பாஜக, அதிமுகவினர். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ரூ. 4000 கோடி செலவிடப்படவில்லை என்று கூறி எந்த வேலைக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்ற கணக்கை வெளியிட்டார். இதை வைத்து தற்போது பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டிவீட் போட்டு கலாய்த்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மழை நீர் வடிகால்வாய் கட்டினீர்களே! எந்த அளவுக்கு, எங்கெங்கே செலவிடப்பட்டது என்பதை அழைத்து சென்று காட்டுகிறேன்" - அமைச்சர் மா சுப்பிரமணியன். 

"4 ஆயிரம் கோடி செலவிடப்படவில்லை, 2 ஆயிரம் கோடி தான் செலவிடப்பட்டுள்ளது" - அமைச்சர் கே.என்.நேரு.

திண்டாடுதே ரெண்டு கிளியே......
என்ன தான் சொன்னாலும்..... 
ஒண்ணுமே புரியல.......
சொன்னது நீ தானா.... 
என் கேள்விக்கென்ன பதில்..... 
உன்னால நான் கெட்டேன்.....என்னால நீ கெட்ட......
ஹூம்! என்னவோ போங்க சார்.

என்று கிண்டலடித்துள்ளார் நாராயணன் திருப்பதி. மறுபக்கம், கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 6000 கோடி செலவிடப்பட்டதாக சொல்கிறார்களே.. அதற்குரிய கணக்கைக் காட்ட, வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிச்சாமி தயாரா என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் விட்டுள்ளார்.

நாலாயிரமோ, ஆறாயிரமோ.. நாங்கள் கண்ணீர்க் கடலில் மூழ்காமல் தடுக்க என்ன தேவையோ அதை செய்து கொடுத்தாலே போதும்.. என்பது அப்பாவி மக்களின் சிம்பிளான கோரிக்கையாகும்.