எம்ஜிஆர் பாடல் வரிகளில் உருவான.. "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே".. நாளை ரிலீஸ்..!

Manjula Devi
Mar 07, 2024,04:05 PM IST

சென்னை: இளம்  வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவு குறித்து பாசிட்டிவாக  எடுத்துச் சொல்லும் "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" திரைப்படம் நாளை (மார்ச் 8)  75 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளில் இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. மேலும் இப்படத்தின் தலைப்பிற்கேற்ப, இப்படம் இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவு குறித்தும் பாசிட்டிவாக பேசும் படமாக இருக்குமாம்.


எஸ் ஹரி உத்ராவின் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைப்படம் உருவாகியுள்ளது.  இயக்குனர் பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் .இதில் கதை மற்றும் திரைக்கதையை திறமையாக வடிவமைத்துள்ளார்.  இவர் ஏற்கனவே சித்தார்த் நாயகனாக நடித்த எனக்குள் ஒருவன் திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர். இப்படத்திற்கு இசை மற்றும் பாடல்களை உருவாக்கிய பிரதீப் குமார் இப்படத்தை தயாரித்தும் உள்ளார்.




இப்படத்தின் மூலம் செந்தூரப் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ப்ரீத்தி கரண் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி, ஷவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே தாஸ், எம்.அமுதராணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இந்நிலையில் இப்படம் நாளை மார்ச் 8 ஆம் தேதி வெள்ளியன்று, 75 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் எஸ். பிரதீப் குமார் கூறுகையில், எஸ். ஹரி உத்ரா அவர்கள் இந்தப் படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி, இந்தப் படத்தை வெளியிட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.




இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள எங்களின் நோக்கம், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு கண்ணியமான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். 


இந்தப் படத்தை உருவாக்குவதற்குப் பெரிய தூணாக இருந்த இயக்குநர் பிரசாத் ராமர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், குறிப்பாக எஸ். ஹரி உத்ராவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.