தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை பதவியிலிருந்து ஓய்வு பெறும் தலைவர் அண்ணாமலை இன்று நடந்த விழாவில் அறிவித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இருப்பினும் மீண்டும் அவர் தலைவராக தேர்வாவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற பேச்சு இருந்து வந்தது.. இறுதியில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை பாஜக மேலிடம் எடுத்தது.
அதன்படி நேற்று புதிய தலைவர் பதவிக்கான விருப்ப மனு பெறப்பட்டது. அதில், நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்திருந்தார். இதையடுத்து இன்று வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் புதிய தலைவர் அறிவிப்பு விழா நடைபெற்றது. அதில் பேசிய அண்ணாமலை, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு தலைவர் நியமன சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவரையும் மேடையில் குணிந்து கும்பிட்டார் நயினார் நாகேந்திரன்.
புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனை, அண்ணாமலை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.
திருநெல்வேலி தொகுதி சட்டசபை உறுப்பினரான நயினார் நாகேந்திரன், சட்டசபை பாஜக கட்சித் தலைவராகவும் இருக்கிறார். அதிமுகவில் இருந்தபோது அமைச்சர் பதவியையும் அவர் வகித்துள்ளார். திராவிட அரசியலில் ஊறித் திளைத்தவரான நயினார் நாகேந்திரன் தற்போது தேசியக் கட்சியான பாஜகவின் மாநிலத் தலைவராக செயல்படப் போகிறார்.
இன்றைய விழாவில் முன்னாள் தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், மற்றும் வானதி சீனிவாசன், எச். ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகியுள்ளார் நயினார் நாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.