நயினார் நாகேந்திரன் கேட்டது புதிய "டர்ஃப்".. உதயநிதி ஸ்டாலின் கொடுத்தது... செம!

Su.tha Arivalagan
Jul 16, 2023,09:40 AM IST

சென்னை: திருநெல்வேலி தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வைத்த கோரிக்கைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பதில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதிய ஹாக்கி டர்ஃப் (செயற்கைப் புல்தரை) போடப்படுகிறது. இதற்காக சென்னையிலிருந்து செயற்கைப் புல்தரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பழசாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர்   உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு.. பாளையங்கோட்டை  அண்ணா விளையாட்டு  மைதானத்திற்கு சென்னையில் இருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப் (Hockey turf)அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதை   அமைப்பதற்கான  செலவே மிகவும் அதிகம் எனவே புதிய  ஹாக்கி டர்ஃப் (Hockey Turf) அனுப்பி வைத்து அதனை அமைக்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.




இதற்கு உடனடியாக உதயநி திஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கூடவே நயினார் நாகேந்திரனுக்கு அவர் அன்பான கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். நயினார் நாகேந்திரன் அளித்துள்ள பதில் டிவீட்:


அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம்,


சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது. இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை கழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து வருகிறது. சர்வதேச அளவிலான இப்போட்டிக்காக புதிய Hockey Turf–ஐ அமைக்கவுள்ளோம். 


மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட Turf, தேசிய அளவிலான போட்டிகள் & பயிற்சிக்காக இன்னும் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. ஆகவே, அந்த Hockey Turf வேண்டுமென்று தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.


விளையாட்டு வீரர்கள் அதிகம் நிரம்பிய பாளையங்கோட்டை பகுதியிலிருந்தும் அத்தகைய கோரிக்கை வந்தது. எனவே, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்த Hockey Turf-ஐ வழங்கினோம். 


"தன்னம்பிக்கை" அதுதானே வாழ்க்கை..!



புதியது தான் வேண்டுமெனில் சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட Hockey Turf-ஐ தேவையுள்ள வேறு மாவட்டத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அதே நேரத்தில், பாளையங்கோட்டையில் புதிய Turf அமைக்க ரூ.4 கோடி வரை செலவாகும். 


அண்ணன் நாகேந்திரன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை வழங்கினால், மீதி தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிச்சயம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.


ஆஹா.. அண்ணாச்சி பழசை எடுத்துக்கிட்டு புதுசு கொடுன்னு கேட்டா.. பதிலுக்கு உதயநிதி 3 கோடி காசு கேக்காகளே என்று நெல்லைக்காரர்கள் கலகலப்பாக இதை விவாதித்துக் கொண்டுள்ளனராம்!