ரூ. 300 கோடி சொத்து.. 82 வயது மாமானாரை.. கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய.. மருமகள்!

Su.tha Arivalagan
Jun 12, 2024,05:17 PM IST
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ரூ. 300 கோடி சொத்துக்களை  அபகரிப்பதற்காக 82 வயதான மாமனாரை கூலிப்படையினரை வைத்துத் தீர்த்துக் கட்டிய மருமகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அந்த பரிதாபத்துக்குரிய முதியவரை கார் ஏற்றிக் கொலை செய்துள்ளது இந்தக் கும்பல். தற்போது போலீஸார் அந்த மருமகளை கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் அர்ச்சனா மனீஷ் புட்டவார். இவர் மகாராஷ்டிர மாநில அரசின் நகர திட்டமிடல் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். 14 நாட்களுக்கு முன்பு இவரது மாமனார், புருஷோத்தம் புட்டவார் கார் விபத்தில் மரணமடைந்தார். இதுகுறித்து முதலில் விபத்து என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.



விசாரணையில்தான் இவர் தற்செயலாக விபத்தில் இறக்கவில்லை, மாறாக இது திட்டமிட்ட கொலை என்று போலீஸாருக்குத் தெரிய வந்தது. கூலிப்படையை அமர்த்தி இந்தக் கொலை செய்ததும், இதற்காக  அந்தக் கூலிப்படைக்கு ரூ. 1 கோடி பணம் கொடுக்கப்பட்டதையும் போலீஸார்  கண்டுபிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் அர்ச்சனாதான் தங்களைக் கொலை செய்ய ஏவியதாக அவர்கள் கூறவே போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

மருமகள் போட்ட பலே ஸ்கெட்ச்:

அர்ச்சனாவின் மாமனாருக்கு ரூ. 300 கோடி அளவுக்கு சொத்து  உள்ளது. ஆனால் இதை அவர் அர்ச்சனாவுக்கு மாற்றாமல் மறுத்து வந்துள்ளார். இந்த சொத்துக்களை வேறு யாருக்காவது அவர் எழுதி வைத்து விட்டால் தனது நிலை சிக்கலாகி விடும் என்று நினைத்த அர்ச்சனா முழு சொத்தையும் அபகரிக்க மாமனாரைக் கொலைசெய்ய முடிவெடுத்தார்.

இதையடுத்து தனது கணவரின் டிரைவர் பாக்டே அழைத்து இதுகுறித்துப் பேசியுள்ளார். அவர் ஆள் வைத்து இதைச் செய்யலாம் என்று கூறியுள்ளார். மேலும் அவரே நீரஜ் நிமிஷே, சச்சின் தர்மிக் ஆகிய இருவரை அழைத்து வந்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு ரூ. 1 கோடி பேசி கொடுத்து கொலை செய்ய உத்தரவிட்டுள்ளார் அர்ச்சனா.

அவர்களும் விபத்து போல இந்தக் கொலையை செய்துள்ளனர். ஆனால் சிசிடிவி கேமராக்கள் மூலம் கார் விபத்து திட்டமிட்டு நடந்த கொலை என்பதை போலீஸார் கண்டுபிடித்து விட்டனர். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்ச்சனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்ச்சனாவின் கணவர் மனீஷ் ஒரு டாக்டர் ஆவார்.  அர்ச்சனாவுக்கு அவரது அலுவலகத்திலும் நல்ல பெயர் கிடையாதாம். அடிக்கடி வேலைக்கு வர மாட்டாராம். அவருக்கு அரசியல்தொடர்புகள் இருப்பதால் அதை வைத்து பலரையும் மிரட்டி வந்துள்ளதாக சொல்கிறார்கள். அவர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் கூட அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி தொடர்ந்து தப்பி வந்துள்ளார். தற்போது பணத்துக்காக மாமனாரையே கொலை செய்யும் அளவுக்குப் போய் விட்டார் இந்தப் பெண்மணி. இவருக்கு 53 வயதாவது குறிப்பிடத்தக்கது.