நாகை டூ இலங்கை.. கப்பல் இன்னிக்குப் போகலையாம்.. 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Su.tha Arivalagan
Oct 10, 2023,10:23 AM IST

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கை வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்தியா இலங்கை இடையே தற்போது விமானப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டனத்திற்கும் - காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டது. தற்போது இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.




3 மணி நேர பயணம் கொண்ட இந்த கப்பலின் வெள்ளோட்டம வெற்றிகரமாக முடிந்த நிலையில் இன்று முதல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 40க்கும் மேற்பட்டோர் இந்த கப்பலில் பிரயாணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர்.


ஆனால் தற்போது திடீரென இந்த பயணம் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அமைச்சர்கள் தொடக்க விழாவுக்கு வருவதற்கு வசதியாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.


அக்டோபர் 12ம் தேதி காலை 7 மணிக்கு கப்பல் நாகையிலிருந்து புறப்படும் என்று தற்போது அறிவித்துள்ளனர்.