நாகப்பட்டனம் - இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை... மே 17ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

Su.tha Arivalagan
May 12, 2024,09:59 PM IST

சென்னை: இலங்கையின் காங்கேசன் துறைக்கும், தமிழ்நாட்டின் நாகப்பட்டனத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மே 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி இந்த கப்பல் சேவையை டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முதலில் பயண கட்டணமாக ஒவ்வொரு பயணிக்கும் ரூபாய் 7670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததால் இந்த விலையானது குறைக்கப்பட்டு 2803 என்று நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் போதிய வரவேற்பு இல்லாதது காரணமாக தொடங்கிய இரண்டாவது நாளிலேயே இந்த கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.




இந்த நிலையில் தற்போது இந்த கப்பல் போக்குவரத்தானது மீண்டும் இன்று முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சிவகங்கை என்ற கப்பல் அந்தமானிலிருந்து வருவதாக கூறப்பட்டது. இந்த கப்பல் இரண்டு தளங்களைக் கொண்டது. கீழ் தளத்தில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும், மேல் தளம் பிரீமியம் வகை இருக்கைகளுகக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகை பிரிவில் 27 இருக்கைகள் உள்ளன.


கீழ் தளத்தில் பயணிக்க ரூபாய் 5000, மேல் தளத்தில் பயணிக்க ரூபாய் 7500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த கப்பலில் பயணம் செய்ய பயணிகள் இடையே ஆர்வமும் விருப்பமும் நிலவிய நிலையில் பலர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இன்று தொடங்குவதாக இருந்த இந்த கப்பல் சேவையானது மே 17ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்தமானிருந்து கப்பல் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த தள்ளிவைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கப்பலில் பயணம் செய்ய 16ம் தேதி வரை முன்பதிவு செய்திருப்போர் தங்களது கட்டணங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பான நடைமுறைகளுக்கு customercare@sailindsri.com என்ற இமெயிலைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.