நாகை டூ இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை.. இன்று முதல் தொடக்கம்..!

Manjula Devi
Feb 22, 2025,07:06 PM IST
நாகை: நாகை இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த  கப்பலுக்கு செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் போக்குவரத்து சேவை நாகையில் இருந்து இலங்கைக்கும்,  மறுமார்க்கமாக இலங்கையில் இருந்து நாகைக்கும் இயக்கப்பட்டது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர ஆறு நாட்களும் கப்பல் போக்குவரத்து 
சேவை நடைபெற்றது.

ஆனால்  வடகிழக்கு பருவமழை போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு முதல்  நாகை டூ இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே நாகை மற்றும் இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து  22ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.




இந்த நிலையில்,  நாகை டூ இலங்கை இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவை மீண்டும் இன்று  தொடங்கியது. இந்த கப்பல் போக்குவரத்து சேவையை பயன்படுத்த பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தின்  வாயிலாக பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இலங்கை செல்ல காலை உணவு, மற்றும் மதிய உணவு உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 4250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இச்சேவை இருக்கும்  சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது.