நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து.. நாளை தொடக்கம்.. பயணிகள் ஹேப்பி!

Meenakshi
Oct 13, 2023,06:42 PM IST


நாகப்பட்டனம்: இந்தியாவின் நாகப்பட்டனத்துக்கும், இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை முதல் தொடங்குகிறது.


கானொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில்  மத்திய, மாநில அமைச்சர்கள் இதை நாளை தொடங்கி வைக்கிறார்கள்.




நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்டோபர் 14ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்னரே வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அக்டோபர் 12ம் தேதி முதல் சேவை தொடங்கும் எனக் கூறப்பட்டது. தற்போது அது தள்ளி வைக்கப்பட்டு நாளை தொடங்குகிறது.


ஏசி வசதியுடன் கூடிய இந்த கப்பலில் 150 பயணிகள் வரை பயணிக்கலாம். நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடக்க நாளை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் கட்டணமாக ரூபாய் 3000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் எல்லாம் இந்த கப்பலில் பயணிக்க, பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இதுவரை 35 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் 50 கிலோ வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் லக்கேஜ் கொண்டு செல்லலாம். இரு நாடுகளுக்கு இடையிலான பயணம் என்பதால், இந்தக் கப்பலில் பயணிக்க பாஸ்போர்ட் மற்றும் இ விசா அவசியம்.  


இலங்கை - இந்தியா இடையே தற்போது விமானப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. இந்த நிலையில் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவது இரு நாட்டு மக்களிடையே, குறிப்பாக தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. குறைந்த செலவில் இரு நாடுகளுக்கும் போய் வரும் கனவும் இதன் மூலம் நனவாகியுள்ளது.