"திரைப்பட நகரம் அமைக்கும் முடிவுக்கு.. நன்றிகள் முதல்வரே"..  நடிகர் சங்கம் பாராட்டு, வரவேற்பு!

Manjula Devi
Feb 21, 2024,03:27 PM IST

சென்னை: தமிழ் திரை துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான, திரை நகரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த  முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் சங்க தலைவர் நாசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்கள், உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள்  இடம் பெற்றன. தமிழ்  திரைப்துறையினர் நீண்ட நாட்களாக பூந்தமல்லியில் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். 


இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் திரைப்படம் நகரம் அமைக்க நிதி ஒதுக்குவதாக அறிவிப்பை  வெளியிட்டார். இதனால் நடிகர் சங்கத்தினர்கள், நடிகை, நடிகர்கள் உள்ளிட்ட பலர்  தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக மகிழ்ச்சியில் திளைத்தனர்.


இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கையில் கூறியுள்ளதாவது:




சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்  இடம் பெற்றுள்ள  தமிழ் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ்., அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்‌ஷன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.


தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாக பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாக திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக  திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட  நகரமிது.  காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. 


தமிழ் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக  பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரிய செய்கின்ற திட்டமிது.  தமிழ் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என நடிகர் சங்க தலைவர் கூறினார்.