பங்காரு அடிகளார் எனக்கு அப்பா மாதிரி.. கோவில்ல போய் பூஜையெல்லாம் பண்ணேன்.. சீமான்

Su.tha Arivalagan
Oct 22, 2023,09:46 AM IST

சென்னை: எனக்கும் பங்காரு அடிகளாருக்கும் அப்பா மகன் மாதிரியான பாசப் பிணைப்புதான் இருந்தது. அவரது மரணம் தமிழ் இனத்திற்குப் பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.


மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் சமீபத்தில் காலமானார். அவரது மறைவால் அவரது செவ்வாடை பக்தர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இன்னும் அந்த இழப்பிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. பங்காரு அடிகளாரின் உடல் கோவில் வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. முழு அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.


இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தர்மபுரியில் செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:




பங்காரு அடிகளாருக்கும் எனக்கும் அப்பா மகன் மாதிரியான உறவு. பாசப் பிணைப்புதான் இருந்தது. அம்மா என்கிட்ட அன்பா இருப்பாங்க. இதை பேரிழப்பாக பார்க்கிறேன்.  கர்ப்பகிரகத்துக்குள் வரக் கூடாது, கோவிலுக்குள் வரக் கூடாதுன்னு சொல்லிட்டிருந்தப்போ, அய்யாவோட பேரன் அகத்தியன் என்னை கோவிலுக்குள் போய் பூஜை பண்ணுன்னு சொன்னான். மணி அடிச்சு தீபாராதனை காட்டி வழிபட்டேன்.


அவர் செய்தது பெரிய புரட்சி. தமிழரோட மெய்யியல் மரபில் அய்யா செய்தது பெரிய புரட்சி. பெண்கள் கர்ப்பகிரகத்துக்குள் உள்ளே வரக் கூடாது, போகக் கூடாதுன்னு இருந்ததை உடைச்சுக் காட்டியவர். என்னிடம் ஒருமுறை, டேய் பேசிப் பேசிய நிறைய இளைஞர்களை இழுத்துட்டடா என்றார். பிறகு அவரே, நான் பேசி நீ பாத்திருக்கியாடான்னு கேட்டார்.. அதன் பிறகு.. நான் பேசறதே கிடையாது. பேசாமலேயே எத்தனை பேரை இழுத்திருக்கேன் பாருன்னு சொன்னார். 


ஆன்மீகப் பேரறிஞர், நம்ம இனத்துக்கு பெருமை அடையாளம்.  கல்லூரி இருக்கு. ஏழை மாணவன்னு சொன்னா பணம் தராம சேத்துக்குவாங்க. அவரது இறப்பு செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சி ஆயிட்டேன். நல்லாதான் இருந்தார். விரைவில் போய் துயரத்தைப் பகிர்ந்து கொள்வேன். பங்காரு அடிகளாரின் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்புன்னுதான் சொல்ல முடியும் என்றார் சீமான்.