விஜயலட்சுமி பற்றிப் பேசுவதையே கேவலமாக நினைக்கிறேன்.. சீமான்

sahana
Aug 29, 2023,03:20 PM IST
சென்னை: நடிகை விஜயலட்சுமியின் புகாரில் உண்மை இருந்தால் போலீஸ் விசாரணைக்கு எடுத்திருப்பார்கள். அதைப் பற்றி பேசுவது கேவலம் என நினைக்கிறேன் என்றார்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நிருபர்களிடம் பேசியபோது சீமான் கூறியதாவது:

நீட், சிஏஏ, என்.ஆர்.பி, ஜி.எஸ்.டி உள்ளிட்டவைகளை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது. அதனை பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆளுகிறது. காவிரியில் தண்ணீர் தர அந்த அரசு மறுக்கிறது கூட்டணியை விட்டு திமுக வெளியேற வேண்டியதுதானே. காவிரி நீரை தரமறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி எதற்கு?. 

காவிரியில் தண்ணீர் வந்தால் மட்டுமே, டெல்டா மாவட்டங்கள் செழிக்கும். இல்லையென்றால், அம்மாவட்டங்கள் பாலைவனமாகுவதோடு, காலை சிற்றுண்டி திட்டத்தையெல்லாம் செயல்படுத்த முடியாது. 
காலை உணவு, மதிய உணவு, பெண்களுக்கு ஆயிரம் என்று மக்களை கையேந்த வைத்தது தான் இந்த திமுக அரசின் சாதனையாகும். தேர்தலின் போது அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் தருவதாக கூறினார்கள் இப்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு என்கிறார்கள் எங்கள் பெண்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கு இவர்கள் யார்?. 

மூன்று மந்திரிகளின் ஊழல் குற்றச்சாட்டை தானாக எடுத்து விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்தை வரவேற்கிறேன்.  தமிழகத்தில் நிலக்கரி வளம் நெய்வேலியில் சுரண்டப்படுகிறது. இது குறித்து நீதிபதி தண்டபாணி கவலை தெரிவித்ததை வரவேற்கிறேன். அதிலிருந்து தயாரிக்கும் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள் ஆனால் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறிக்கிறார்கள்.  

நடிகை விஜயலட்சுமியின் புகாரில் உண்மை இருந்தால் போலீஸ் விசாரணைக்கு எடுத்திருப்பார்கள். அதைப் பற்றி பேசுவது கேவலம் என நினைக்கிறேன். என்னை நம்பி தமிழகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி பேசுவது அக்குடும்பங்களையும் பாதிக்கும் எனக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர் குற்றம் சாட்டுவதற்கு அரசியல் கூட காரணமாக இருக்கலாம் என்றார் சீமான்.