10,804 பேரும் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.. "நாம் தமிழர்" காளியம்மாள் உருக்கம்

Su.tha Arivalagan
Mar 03, 2023,10:04 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக வாக்களித்த 10,804 பேரும் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் அக்கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் பிரகாசன்.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். 2வது இடத்தை அதிமுக பிடித்தது. 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், நான்காவது இடத்தில் தேமுதிகவும் வந்தன. காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.


3 வட கிழக்கு மாநிலங்களையும் மொத்தமாக அள்ளியது பாஜக.. மேகலாயாவில் திடீர் திருப்பம்!


இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அனல் பேச்சாளர் காளியம்மாள் பிரகாசன் விடுத்துள்ள ஒரு டிவீட்டில், ஈரோடு கிழக்கு நல்ல விலைக்கு விற்பனையானது.  10,804 பேரும் நெஞ்சை நிமிர்த்து பெருமை பட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தமிழனின் இனமானம் காக்க, தூய்மை அரசியல் பிறக்க இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்க கூடிய நேர்மையாளருக்கு தான் வாக்களித்தோம் என்று அவர் கூறியுள்ளார்.

திமுக ராஜீவ் காந்தி டிவீட்

அதேசமயம், திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி போட்டுள்ள டிவீட்டில்.,ஈரோட்டில் பணம் தான் வென்றது என பாசிஸ்டுகள் பல பேர் பதறுகிறார்கள்! பணத்தைவிட மோசமான சீமானின் சாதி வெறியையும்..
அண்ணாமலை &Coவின் மதவெறியையும்..  ஈரோட்டு மக்கள் வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது தான் உண்மை என்று அவர் சாடியுள்ளார். ராஜீவ் காந்தி, நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய வேட்பாளர்கள் சார்பில் கொலுசு, மூக்குத்தி, பல்வேறு பரிசுப் பொருட்கள், ஆட்டுக்கறி, கோழிக்கறி   உள்ளிட்டவை தடபுடலாக கொடுக்கப்பட்டதாக பல்வேறு வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின என்பது நினைவிருக்கலாம்.

என்ன கொடுக்கப்பட்டது.. எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது கொடுத்தவர்களுக்கும், அதை வாங்கியவர்களுக்கும்தான் வெளிச்சம்!