#அடுத்து_நாமதான்ணே.. சீமான் பிறந்த நாள்.. டிவிட்டரை தெறிக்க விட்ட நாம் தமிழர் "தம்பிகள்"!

Su.tha Arivalagan
Nov 08, 2023,03:51 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 57வது பிறந்த நாளை இன்று சிறப்பாக கொண்டாடிய நிலையில் டிவிட்டர் தளத்தை அவரது கட்சியினர் தெறிக்க விட்டனர். அடுத்து நாமதாண்ணே என்ற ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்டாக்கினர்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமத்தில் நவம்பர் 8 ,1966 ஆம் ஆண்டு பிறந்தவர் சீமான். திரைப்பட இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி பின்பு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் மாறியவர். அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். 


தமிழ் தேசிய அரசியலை மேற்கொண்டு  வரும் சீமானின் மேடைப் பேச்சுக்கள் மிகப் பிரபலமானவை. அவரது பேச்சுக்கள்தான் அவரை நோக்கி இளைஞர் பட்டாளத்தை இழுத்து வர உதவியது. மே 10, 2019 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை நடத்த ஆரம்பித்தார். ஒரு தனி மனிதராக போராடி வருபவர்.




அரசியலுக்கு வந்த பின்னர் காவிரி, முல்லைப் பெரியார் விவகாரம் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தியவர். தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என முழக்கமிட்டு வருகிறார். இவரது கொள்கைகள் பல சர்ச்சைக்குள்ளானாலும் கூட விடாமல் தொடர்ந்து தனது நோக்கத்தில் உறுதியாக இருக்கிறார். 


சீமான் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னடையாளம் பேணுவதோடு பிறரடையாளம் போற்றவும் செய்து தனக்கென்றொரு  அரசியல் முழங்கிவரும் அன்புச் சகோதரர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


நாம் தமிழர் கட்சியினரும் டிவிட்டர் பக்கத்தில் #அடுத்து_நாமதான்ணே என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் வைரலாக்கியுள்ளனர். இன்று முழுவதும் அது டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.