Seeman: சவுண்டாக சாதித்த நாம் தமிழர்.. 8.2% வாக்குகளுடன் கெத்து காட்டி.. சைலன்ட்டாக அசத்திய மைக்!

Su.tha Arivalagan
Jun 05, 2024,05:31 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு அசத்தலான சாதனையைப் படைத்துள்ளது. புதிய சின்னத்தில் போட்டியிட்டு 8.2 சதவீத வாக்குகளைப் பெற்று அனைவரையும் மிரள வைத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் அது அள்ளியுள்ள வாக்குகளைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவும் இருக்கிறது.


2016 முதல் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே அது போட்டியிடுகிறது. எந்தக் கூட்டணியிலும் அது இணைவதில்லை. 50 சதவீத பெண்கள், 50 சதவீத ஆண்கள் என வேட்பாளர் தேர்வில் சமத்துவத்தை உருவாக்கி தனது நிலையிலிருந்து இன்று வரை மாறாமல் தொடர்ந்து அது நடை போட்டுக் கொண்டிருக்கிறது.




ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தோல்வியுற்றே வந்திருக்கிறது. ஏன் அக்கட்சித் தலைவர் சீமானே சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுறவே செய்தார். ஆனால் அது வாக்குகள் வாங்கும் விதம் ஆச்சரியப்பட வைக்கிறது. அதிலும் இந்த தேர்தலில் அந்தக் கட்சி சைலன்ட்டாக மிரட்டி விட்டுப் போயுள்ளது.


2016 சட்டசபைத்  தேர்தலில் நாம் தமிழர் கட்சி முதல் முறையாக  போட்டியிட்டபோது அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 1.06 சதவீதம்தான். கிட்டத்தட்ட 4.60 லட்சம் ஓட்டுக்களை அது பெற்றது. அதைத் தொடர்ந்து வந்த 2019 லோக்சபா தேர்தலில் தனது நிலையை சற்று வலுப்படுத்தி 16.67 லட்சம் வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர் கட்சி. அதன் வாக்கு சதவீதம் 3.91 சதவீதம் ஆகும். இதைத் தொடர்ந்து வந்த 2021 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மேலும் பெருவாரியான வாக்குகளை அள்ளியது. அதாவது 6.89 சதவீத வாக்குகளுடன், 30 லட்சம் வாக்குகளைப் பெற்று கலக்கியது இக்கட்சி.


இந்தத் தேர்தல்கள் வரை நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில்தான் போட்டியிட்டது. ஆனால் முதல் முறையாக 2024 லோக்சபா தேர்தலில் அந்தச் சின்னத்தைத் தர தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்குப் பதில் வேறு ஒரு சின்னத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறியது. இதனால் வேறு வழியில்லாமல் மைக் சின்னத்தை தேர்வு செய்தார் சீமான். கரும்பு விவசாயி சின்னத்தை விட இந்த சின்னம் படு வேகமாக மக்களிடையே பிரபலமானது.. காரணம், மைக்கும், சீமானும் பிரிக்க முடியாத அம்சங்கள் என்பதால் மக்கள் வேகமாக இந்த சின்னத்தை உள் வாங்கிக் கொண்டனர். 


புதிய சின்னத்தை தொகுதி தொகுதியாக கொண்டு சென்று பேசிய சீமான் பேச்சுக்கு வழக்கம் போல மக்கள் ஆர்வத்துடன் கூடி நின்று கவனித்தனர். இதெல்லாம் பெருவாரியான வாக்குகளாக மாறியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 8.2 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  36 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தும் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைக்கவுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் 5வது பெரிய கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது.




இந்தத் தேர்தலில் கள்ளக்குறிச்சி, திருச்சி, ஈரோடு, நாகப்பட்டனம் தனி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர். மற்ற தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளனர். இது பெரிய சாதனைதான்.


இது போக, 12 தொகுதிகளில் இவர்களது வேட்பாளர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அசத்தியுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர்,  காஞ்சிபுரம் தனி,  தூத்துக்குடி, தென்காசி தனி, திருவள்ளூர் தனி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, சிவகங்கை, நாகப்பட்டினம் தனி, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகியவையே அந்தத் தொகுதிகள். இந்தத் தொகுதிகளில் முதலிடத்தைப் பிடித்த திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு இவர்கள் சற்று சவாலாகவே இருந்துள்ளனர்.


நாம் தமிழர் கட்சியின் இந்த எழுச்சி மிக்க வளர்ச்சி பல பாடங்களை சொல்வதாக உள்ளது. தேமுதிக இப்படித்தான் ஆரம்பத்தில் வாக்குகளை அள்ளிக் குவித்தது. பிறகு கூட்டணி அரசியலுக்கு மாறி வீழ்ச்சி கண்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்திலிருந்தே படிப்படியாக வளரந்து வருகிறது. தவிர்க்க முடியாத சக்தியாக தற்போது மாற ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து தனித்தும் போட்டியிடுவது முக்கியமானது. வருகிற சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வியூகம் எப்படி இருக்கும் என்பது பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.