அச்சச்சோ.. நோன்பு கஞ்சி குடித்தபோது.. பல்செட்டை விழுங்கிய 93 வயது பாட்டி.. காப்பாத்திட்டாங்க!

Meenakshi
Mar 23, 2024,01:38 PM IST

சென்னை: நோன்பு கஞ்சி குடிக்கும் போது பல் செட்டையும் சேர்த்து விழுங்கிய 93 வயது மூதாட்டியை 4 மணி நேரம் போராடி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.


சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ரசியா பேகம். இவருக்கு 93 வயதாகிறது. தற்பொழுது நோன்பு காலம் நடைபெற்று வருவதால், 93 வயதுடைய ரசியா பேகம் நோன்பு இருந்து வந்துள்ளார். நோன்பு முடிந்த நிலையில், விரதத்தை முடிக்கும் பொழுது நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது தவறுதலாக நோன்பு கஞ்சியுடன் தனது பல் செட்டையும் சேர்ந்து விழுங்கியுள்ளார். 




பல் செட் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டதால் , மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார் ரசியா பேகம். மூச்சு விட முடியாமல், எச்சில் கூட விழுங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இரவு 2 மணியளவில் ரசியா பேகத்தை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ரசியா பேகம் உயர் ரத்த அழுத்தம் போன்ற வயோதிக வியாதிகளினாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரசியா பேகத்துக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உணவுக்குழாயில் சிக்கி இருந்த பல்செட்டை மீட்க போராடினர். 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் லாவகமாக பல்செட்டை வெளியில் எடுத்தனர். அதன் பிறகே ரசியா பேகம் இயல்பு நிலைக்குத் திரும்பினார். 


தற்பொழுது ரசியா பேகம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.