லண்டன் கிளம்பினார் இசைஞானி இளையராஜா.. இது என்னுடைய பெருமை அல்ல.. நாட்டின் பெருமை.. என நெகிழ்ச்சி!
சென்னை: சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவதாக இன்று லண்டன் புறப்பட்டார் இசைஞானி இளையராஜா. முன்னதாக செய்தியாளர்களிடம் இளையராஜா, இது என்னுடைய பெருமை அல்ல.நாட்டின் பெருமை. நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான். உங்களின் பெருமையைத்தான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வரலாற்று சிறப்புமிக்க இசையமைப்பாளராக போற்றப்படும் இசைஞானி இளையராஜா மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்த இருக்கிறார். அதாவது இவர் வேலியன்ட் என்ற தலைப்பில் முதல் சிம்பொனியை இயற்ற இருக்கிறார். சிம்பொனி என்பது சோகம், மகிழ்ச்சி, துக்கம், போன்ற இசைகள் ஒன்று சேர பல்வேறு இசை கலைஞர்களால் அரங்கேற்றுவதுதான். இதன் மூலம் முதன் முதலில் சிம்பொனியை இயற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க இருக்கிறார் இசைஞானி இளையராஜா.
வேலியன்ட் எனும் தலைப்பில் இளையராஜா இயற்றியிருக்கும் சிம்பொனி வருகின்ற எட்டாம் தேதி லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக மேற்கிந்திய பாரம்பரியபடி நடைபெற உள்ளது.
இதற்காக இசைஞானி இளையராஜாவை அவரது இல்லத்திற்கே சென்று நேரில் சந்தித்து, அவரின் சாதனையை போற்றி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, த.மா.க தலைவர் ஜி.கே வாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிம்பொனி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று இசைஞானி இளையராஜா லண்டன் புறப்பட்டார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும். ரசிகர்களைப் போலவே நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எனது பெருமை அல்ல. இது நாட்டின் பெருமை. incredible இந்தியா மாதிரி.. நான் incredible இளையராஜா. நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான். உங்களின் பெருமையை தான் லண்டனில் சேர்க்கப் போகிறேன். இதுக்கு மேலே யாரும் வரப்போவதும் இல்லை. வந்ததும் இல்லை என நெகிழ்ச்சியாக பேசினார்.