பவதாரணிக்கு பிரியா விடை கொடுத்தது இளையராஜா குடும்பம்.. தேனி அருகே உடல் நல்லடக்கம்

Manjula Devi
Jan 27, 2024,06:50 PM IST

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி உடல் இன்று மாலை தேனி மாவட்டம் லோய்ர்கேம்ப் பகுதியில் உள்ள இசைஞானி இளையராஜாவின் பண்ணை இல்ல வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


47 வயதான பவதாரிணி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பிருந்தே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் (25.1.24) மாலை காலமானார். புற்று நோயால்  பாடகி பவதாரணி இறந்த செய்தி கேட்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 


பவதாரணியின் உடல் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, சென்னை தியாகராயர் நகர், முருகேசன் தெருவில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நடிகர்கள் விஷால், கார்த்திக், சிம்பு, நடிகை காயத்ரி ரகுராம், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி,  நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், சிவக்குமார், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.


விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.





இந்நிலையில் இன்று மாலை சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் பண்ணை இல்லத்தில் பவதாரணியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இளையராஜா தீவிர சிவன் பக்தர். இதனால் ஆறு ஓதியர்கள் கொண்டு திருவாசகம் பாடி  இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட்டது. பவதாரணியின் சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இறுதி சடங்குகள் செய்தனர்.


அதன் பின்னர் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் பவதாரணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.


மறக்க முடியாத பவதாரணி


இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி இளையராஜா இசையில் ராசையா என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர். 2001 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் பாரதி என்ற திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடினார். இந்த பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார். 


தனி பாணி குரல் வளத்துடன், அருமையான பல பாடல்களை பவதாரணி பாடியுள்ளார். சிறந்த பாடகி என்ற அடையாளத்தின் மூலம் தனது  திரை பயணத்தை தொடங்கிய பவதாரணி 90களில் பல பாடல்களை பாடி பலரின் பாராட்டுகளை பெற்று வந்தார். இளையராஜா இசை மட்டுமல்லாமல் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இசையிலும் அவர் பாடியுள்ளார். அவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.